பாடல் 1256 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்தனா தனத்த தத்தனா தனத்த தத்தனா தனத்த ...... தனதான |
நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் ...... நலமாக நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே கச்சமே செலுத்தி யச்சமே படுத்து கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான் கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த கட்டனே னினைப்ப ...... தொருநாளே இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு மிட்டமா லவற்கு ...... மருகோனே எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை யெக்கிநேர் மடித்த ...... இளையோனே மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி மிக்கவாள் படைத்த ...... விழியாலே வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே. |
விஷம், வாள் (இவைகளை) ஒத்த கண்களைக் கொண்டு (ஆடவர்களைத்) தாக்கியே, பொருளை விரும்புவர்களாகிய விலைமாதர்களின் காம போகத்தில் இன்பம் பெற, புதைக்கப்பட்ட சிறந்த மனத்தை விருப்பத்துடன் கொடுத்து, சங்குகள் வாழ்கின்ற கடலிலே அணையிட்டது போல, ஒப்பந்தம் செய்த வகையில் (மனத்தைப்) போக விட்டு, பயத்தையே உண்டு பண்ணுகின்ற, கஷ்டமான ஏழு பிறப்புக்களையும் விட்டுத் தாண்டுவதற்கு, கற்ற சிவ நூல்களில் மகிழ்ச்சி கொள்ள வெட்கமே நிறைந்துள்ள, துன்பங்கள் பீடித்த நான் உன்னை நினைப்பதாகிய ஒரு நாள் வருமோ? (வாமனராக வந்து) தமது விருப்பத்தைக் கூறி, (மகாபலி சக்ரவர்த்திக்கு அவனுடைய) தலையில் தமது பாதத்தை வைத்த திருமாலுக்கு மருகனே, அலை வீசும் கடலுக்குள் பரந்து நீண்டிருந்த (சூரனின்) எழு கிரியை வேலால் ஊடுருவச் செலுத்தி நன்கு அழித்த இளையவனே, புகழும்படியாக பருத்து எழுந்துள்ள, முத்து மாலை நிறைந்த, மார்பினள், கூர் மிகுந்த வாளாயுதத்தைப் போன்ற தன் கண்களைக் கொண்டு, (உயிர்களின் வினையை) வெட்ட வல்ல சிறந்த வேடுவச்சி ஆகிய வள்ளி கூடவே இருக்க, வெற்றி வேலைத் திருக்கையில் ஏந்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1256 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனா, தனத்த, செலுத்தி, கொண்டு, சிறந்த, தமது, கண்களைக், வெட்கமே, மனத்தை, கொடுத்து, பெருமாளே