பாடல் 1246 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பிலஹரி
தாளம் - அங்கதாளம் - 5
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 5
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன தானனம் தனதனன தானனம் தனதனன தானனம் ...... தனதான |
தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந் தவறுதரு காமமுங் ...... கனல்போலுந் தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ் சமயவெகு ரூபமும் ...... பிறிதேதும் அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண் டறியுமொரு காரணந் ...... தனைநாடா ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின் றபரிமித மாய்விளம் ...... புவதோதான் கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங் களபமொழி யாதகொங் ...... கையுமாகிக் கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங் கருதியிது வேளையென் ...... றுகிராத குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங் குலிசகர வாசவன் ...... திருநாடு குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன் குலையநெடு வேல்விடும் ...... பெருமாளே. |
மேலான எல்லையைக் கண்ட இன்ப சுகங்களும், மனச்சலனம் மிக்க ஆசைகளும், பிழையான நெறியில் செல்லும்படி தூண்டும் காம இச்சையும், தீப்போல அடங்குதற்கு அரிதான கோபமும், துணிந்து ஒரு நல்ல செய்கையைச் செய்ய விடாத ஈயாமைக்குணமும், சமயக் கோட்பாடுகளால் புனையும் பல வேஷங்களும், மற்ற எந்த வெளிப்பாடும், போதும் போதும் என்று தள்ளிய ஞான உணர்ச்சி உள்ளவர்கள் தங்கள் அநுபவம் கொண்டு அறிகின்ற ஒரு மூலப்பொருளை விரும்பி உணராமல், நிரம்ப மதக்கொள்கைகளையே கூறும் புராணங்களையும், வேத மொழிகளையும் எடுத்துக்கொண்டு அளவிலாத வகையில் வெறும் பேச்சு பேசுவதால் என்ன பயன்? காமப் போரை விளைக்கும் இரு அம்புகளான கண்களும், பொட்டு வைத்த, ஒப்பற்ற வில்லைப் போன்ற, அழகிய நெற்றியும், சந்தனக் கலவை நீங்காத மார்புமாகி, உள்ளத்தைக் கவருமாறு உலகில் அவதரித்த தோற்றத்தையும், (தினைப்புனம் காக்கும்) மிக்க பரிதாபமான தொழிலையும் கருத்திலே வைத்து, இந்த வள்ளியை ஆட்கொள்ளும் வேளை வந்ததென, வேடர் குலத்தின் சிறந்த மான் போன்ற வள்ளியுடன் கலந்தாய். போர் செய்ய வல்ல வஜ்ராயுதத்தைக் கரத்திலே கொண்ட இந்திரன் தன் பொன்னுலகமாம் தேவர் நாட்டுக்குக் குடியேற, அசுரன் சூரன் தூள்பட்டுப் போக, இந்தப் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் நடுநடுங்க, நீண்ட வேலைச் செலுத்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1246 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தானனம், போதும், செய்ய, பெருமாளே, மிக்க