பாடல் 1245 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
சுத்த சாவேரி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தத்த தனதனன தத்த தனதனன தத்த தனதனன ...... தனதான |
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர் தக்க மனையினமு ...... மனைவாழ்வுந் தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு தைக்கு மயல்நினைவு ...... குறுகாமுன் பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் பற்று மருள்நினைவு ...... தருவாயே பத்து முடியுருளு வித்த பகழியினர் பச்சை நிறமுகிலின் ...... மருகோனே அத்தி முகவனழ குற்ற பெழைவயிற னப்ப மவரைபொரி ...... அவல்தேனும் அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட விக்குள் மறமகளை ...... யணைவோனே முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு முற்று மறைமொழியை ...... மொழிவோனே முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல் வெட்டி யமர்பொருத ...... பெருமாளே. |
அந்தப் பொருளும், ஏவலாளர்களும், சுற்றத்தினரும், புதல்வர்களும், தகுதியான மனைவியும், மனைவியைச் சார்ந்தவர்களும், இல்லற வாழ்வும் (ஆன இவைகளை) இழக்கும் படியான நிலைமை குறுகி வர, அறிவைச் சிதைக்கும் புத்தி மாறாட்டம் (என்னை) அணுகி வருவதற்கு முன், பக்தியுடனே மனம் உருகி தினமும் உன்னுடைய திருவடிகளை பற்றக்கூடிய திருவருள் நினைவைத் தந்தருள்க. (இராவணனுடைய) பத்து முடிகளையும் அறுத்துத் தள்ளிய அம்பைக் கொண்டவர், மேக நிறத்தினறான திருமாலின் மருகனே, யானை முகம் உடைய விநாயகன், அழகுள்ள பெட்டி போன்ற வயிற்றை உடையவன், அப்பம் அவரை பொரி முதலியவற்றோடு தேனையும் தொப்பையில் நிரப்பி உண்ணும் வலிமையை உடையவன் உதவி செய்ய, காட்டில் வேடப் பெண்ணாகிய வள்ளியை அணைபவனே, வீட்டுப் பேறு அளிக்கும் முதல்வரும், முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்கினி) உடைய இறைவருமாகிய சிவபெருமானுக்கு வேத மொழி முழுவதையும் உபதேசித்தவனே, அரக்கர் கூட்டம் முழுமையும் தோற்றுப் போய் அழிய முன்பு வெட்டி, போர் செய்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1245 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தனதனன, உடைய, உடையவன், வெட்டி, பத்து, பெருமாளே