பாடல் 1244 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்
ராகம் -
...; தாளம் -
தனந்தான தானான தனந்தான தானான தனந்தான தானான ...... தனதான |
செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு சிறந்தியாதி லூமாசை ...... யொழியாத திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி செயுங்காய நோயாள ...... னரகேழில் விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி விடுங்கால மேநாயென் ...... வினைபாவம் விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான விளம்போசை யேபேசி ...... வரவேணும் அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி அழன்றேகி மாசீத ...... நெடுவேலை அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர அலங்கார வேலேவு ...... முருகோனே கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு குணங்கூடி யேவாழு ...... பெருமாளே. |
செழுமையான பொன், மண், பெண் (என்னும் மூவாசைகளும்) முதலில் அரும்பு விட்டுப் பின்னர் வளருவது போன்ற உருவத்துடன், மேலும் மேலும் விளங்கி எதிலுமே ஆசை நீங்காத கோட்பாட்டினை உடைய பேய் பிசாசு (நான்). கொடிய பாவங்களைக் கோடிக் கணக்கில் செய்யும் உடலில் நோய் கொண்டவன். ஏழு நரகங்களிலும் விழுந்து ஆழ்ந்து முழுகும்படி தள்ளுகின்ற யமன் என்னை அணுக, நான் உயிர் விடும் காலத்தில் அடியேனுடைய வினை பாவம் ஆகியவை அதி வேகத்தில் என்னை விட்டு அகலும்படி, குதிரையாகிய மயிலை வேகமாகச் செலுத்தி, ஞான மொழிகளைச் சொல்லும் ஒலியே எனக்குக் கேட்கும்படியாக பேசி வந்தருள வேண்டும். அழுத கோடிக் கணக்கான தேவர்கள் விண்ணில் நீண்ட காலம் அமர்ந்து வாழ்ந்திருக்கும்படியாக, கொதிப்புடன் கோபித்துச்சென்று, மிகவும் குளிர்ச்சியான பெரிய கடல் அதிர்ச்சி அடையும்படி நீ வேகமாகப் பாய்ந்து செல்ல, யமன் (அசுரர்களின் உயிரைக் கவர) விழுந்து அடித்துக்கொண்டு (போர் முனைக்கு) ஓடவே, கூர்மையான, அலங்காரம் உள்ள வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, செழிப்பான காட்டிலே பெண்களின் நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி (ஆடைகளை மறைத்த) மாயக் கண்ணனாகிய திருமாலின் மருகோனே, குறம் என்னும் பாடல் வகையைப் பாடுபவர்களாகிய குறவர்களின் சேரியில் புகுந்து, உன் ஆசைக்கு உகந்த வள்ளியுடன், அவள் குணத்துக்கு மகிழ்ந்து, பிறகு அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1244 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தான, தானான, யமன், விழுந்து, என்னை, ஆடைகளை, கோடிக், மேலும், மருகோனே, பெருமாளே, என்னும், நான்