பாடல் 1243 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
வாசஸ்பதி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தாளம் - கண்டசாபு - 2 1/2
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான |
சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென தூசுவழ கானவடி ...... வதனாலே சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு ளாசைதமி லேசுழல ...... வருகாலன் ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென தாவிதனை யேகுறுகி ...... வருபோது ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு மாதிமுரு காநினைவு ...... தருவாயே ஓதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர் ஓலமிட வேயயில்கொ ...... டமராடீ ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும் யோகமயி லாஅமலை ...... மகிழ்பாலா நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன நாடுமடி யார்கள்மன ...... துறைவோனே ஞானசுர வானைகண வாமுருக னேயமரர் நாடுபெற வாழவருள் ...... பெருமாளே. |
வஞ்சனையாக வைக்கப்பட்ட தூண்டிலில் உள்ள உணவை உண்ணும் ஆசையிலே சுழன்று வரும் மீன்போல, ஆடையின் அழகுடன் கூடிய உருவத்தைக்கண்டு மாந்தளிரின் நிறத்துக்கு உடல் நிறம் சமமாகும் என்று நினைத்து பெண்கள் மீதுள்ள காம இச்சை காரணமாகத் தேடுகின்ற பொருளாசையால் மனம் அலைச்சல் அடையும்போது, வருகின்ற யமன் முதலில் பிரமனால் எழுதப்பட்ட விதிக்குத் தவறாத வகையில் என்னைத் தேடி என் உயிரைப் பற்ற அருகில் வரும்சமயம், ஆதிமுருகா, ஆதிமுருகா, ஆதிமுருகா, என்று நான் கூறுவதற்கு ஆதி முருகனே, நீ அந்த ஞாபகத்தைத் தர வேண்டுகிறேன். ஈரம் உள்ள மேகம் படியும் கிரெளஞ்சகிரி பொடியாகும்படி, அங்கு வாழ்ந்த அசுரர்கள் பயத்தினால் கூக்குரல் இடும்படி, வேல் கொண்டு போர் புரிந்தவனே, ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்துக்கு ஏற்ற குருவாம் சிவபிரான் உனது பாதங்களிலே பணியும்படியான யோக மூர்த்தியான மயில்வாகனனே, குற்றமற்ற பார்வதி மகிழ்ந்து குலாவும் குழந்தையே, தலைவனே, ரகுராமனாம் திருமாலாகிய மாயனுடைய மருகனே, பூமியில் உன்னை விரும்பிப் போற்றும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவனே, ஞான ஸ்வரூபியான தேவயானையின் கணவனே, முருகனே, தேவர்கள் தமது பொன்னுலகை மீண்டும் பெற்று வாழும்படி அருள் புரிந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1243 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, ஆதிமுருகா, முருகனே, பெருமாளே, காதிமுரு, உள்ள