பாடல் 1242 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த தானத்த தான தந்த ...... தனதான |
சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம் ஆவிக்கு ளேது லங்கி ...... அருளாதோ மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதி ரங்கள் ...... பிளவாக வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும் வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங் கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு கூடிக்கு லாவு மண்டர் ...... பெருமாளே. |
கோபத்துடன் உலவுகின்ற கண்களை உடைய விலைமாதர்களுக்கு நாள்தோறும் மருட்சி உற்று, அவர்களை வணங்கியும், அவர்கள் மீது காம ஆசை கொண்டும் திரிகின்ற என்னை சீராகவும் மிக விருப்பத்துடனும் முதலில் கொடுத்த பொருளை மீண்டும் கொடுக்காத பின்னர், அந்தச் சீரும் சிறப்பும் அழிந்து வாழச் செய்யும் சிற்றின்பத்தில் நான் ஈடுபட்டு வறுமையில் வருந்தாமல், நாற்பத்து எட்டாக விரிந்து நாற்பத்து எட்டு கூடச் சேர்ந்து தொண்ணூற்றாறு* தத்துவங்களாக விளங்கி நின்று யாராலும் சொல்லுதற்கு முடியாத வகையில், உடலிடத்தே பூரித்த ஜோதி ஒளி இன்பம் என் ஆவிக்குள்ளே உயிருக்கு உயிராய் விளங்கி எனக்கு அருள் பாலிக்காதோ? பகைமை பூண்டு தேவர்கள் நடுங்கும்படி ஆகாயத்தில் கிளம்பி, மேலே உள்ள பொன்னுலகம் வாய்விட்டு ஓலமிட, திசைகள் பிளவுபடும்படி, வாள் ஏந்தி நேரே எதிர்த்துச் சென்ற சூரனுடைய வலிய மார்பும் நெஞ்சமும் வான் முகடு வரை சிதற, விளங்குகின்ற பொன் மலையான மேரு, கிரெளஞ்ச கிரியையும் கூறு செய்த வேலாயுதனே, குறைவு இல்லாதவனே, வீரர்களுக்கும் வீரனே, கந்தனே, குற்றமில்லாத வேடர்களின் தினைப் புனத்தில் வாழ்ந்திருந்த அழகிய வள்ளியின் அழகைப் பார்த்து ஆசை கொண்டு, தக்க சமயம் அறிந்து, அவளோடு கூடிக் குலாவிய, தேவர்களின் பெருமாளே.
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1242 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத்த, தத்துவம், கொண்டு, தந்த, சிவதத்துவங்கள், தத்துவங்கள், புறநிலை, விளங்கி, வாய்விட்டு, லாவு, நின்று, இன்பம், பெருமாளே, நாற்பத்து