பாடல் 1241 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
கல்யாணி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதான தந்ததன தனதான தந்ததன தனதான தந்ததன ...... தனதான |
சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி சிவபோக மன்பருக ...... அறியாமற் செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத் தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும் உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட முறைநாய கங்கவுரி ...... சிவகாமி ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு மமுதால யம்பதவி ...... யருள்வோனே அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ் அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே. |
சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே இணையும் மங்களகரமான பேரின்பத்தை நன்றாக அனுபவிக்கத் தெரியாமல், இவ்வுலகில் அலைந்து திரிந்து, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சொரூபமாகி, பொதுவாய்த் திகழும் விலைமாதரைப் பின்தொடர்ந்து அழிந்து போவேனோ? தவமும் நிஷ்டைகளும் செய்கின்ற உன் அடியார்களின் கூட்டங்களுடன் அன்போடு மகிழ்ந்து தினமும் விளையாடவும், அடியேனது மும்மலங்கள், பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, நோய்கள் யாவும் அச்சமுற்று அலறி ஓடும்படியாகவும், தக்க சமயத்தில் தினமும் பிரத்யக்ஷமாக வந்தவனாக என்முன்னால் நீ வரவேண்டும். யாவர்க்கும் உதவி செய்பவளும், அன்பர்கள் பணிந்து போற்றும் கல்யாணியும், எந்தை சிவபிரானின் இடது பாகத்தில் நாயகியாக விளங்கும் கெளரியும், சிவகாம சுந்தரியும், விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில் மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும் ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே, வீண் காலம் போக்கும் பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து அன்பர்கள் புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே, அழகனே, மலைகளில் விளங்கி வாழ்பவனே, மயில் வாகனனே, குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியோடு குடியிருக்கும் வேலவனே, புகழ்ந்து போற்றும் அடியவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1241 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தந்ததன, போற்றும், விளங்கும், தினமும், பெருமாளே, அன்பர்கள்