பாடல் 1240 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
வாசஸ்பதி
தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தாந்தன தானதன தாந்தன தானதன தாந்தன தானதன ...... தனதான |
சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக தாண்டவ மாடியவர் ...... வடிவான சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர் தாங்களு ஞானமுற ...... வடியேனுந் தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு ...... சிவயோகந் தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர் வான்பொழில் சூழும்வய ...... லயலேறி மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள் மாந்திய வாரணிய ...... மலைமீதிற் பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி பூண்பன பாரியன ...... தனபாரப் பூங்குற மாதினுட வாடியிருள் பூம்பொழில் மேவிவளர் ...... பெருமாளே. |
சங்கரியாகிய பார்வதி தேவி பாடித் தாளம் இட, மேம்பட்ட ஞான ஆனந்தத் தாண்டவம் ஆடிய சிவபிரானின் வடிவை அடைந்தவர்களும், சாந்த குணத்தின் உச்சி நிலையில் இருந்து, உணர்ச்சி மிகுந்த சிவநேச இனத்தவர்களான பெரியோர்களும், (அந்தச் சிவ நடனத்தைப் பார்த்ததால்) ஞான நிலையை அடைய, அடியேனும் அறி துயில் கொண்ட ஞானக் கண்ணுடனும், வெளியில் விடாதபடி உள்ளேயே சுழுமுனையில் தாங்கிப் பிடித்த பிராணவாயுவுடனும்*, அந்நிலையில் காணப்படும் ஜோதி தரிசனத்துடனும், சிவயோக நிலையில் பரசிவத்துடன் கூடி நிலைத்த ஆன்மாவுடன், விரும்பிய கால அளவுக்கு சும்மா இருக்கும் மெளனஞான நிலையில் வாழும் பாக்கியத்தை உனது திருவருள் எனக்கு அருளாதோ? யானையின் தொங்கும் துதிக்கையைப் போல வாழைக் குலைகளைத் தள்ளுகின்ற வாழைமரங்கள் வளர்கின்ற, பெரிய சோலைகள் சூழ்ந்த வயல்களின் பக்கங்களில் ஏறி மாம்பழங்கள் தேன் ஒழுகும்படி வேங்கை மரத்தின் மேலிருந்து பாயும் குரங்குகள் தேனையும் பழத்தையும் அருந்திய காடுகளைக் கொண்ட வள்ளிமலையில், பூங்கொடி போன்றுள்ள நுண்ணிய இடுப்பு சோரும்படி அணிந்துள்ள முத்தாபரணங்களின் கனமும், மார்பின் பாரமும் உடைய அழகிய குறப்பெண் வள்ளியுடன் அங்கே நேசம் பூண்டு கலந்து விளையாடி, அடர்ந்து இருண்ட சோலையிலே விரும்பி அமர்ந்த பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1240 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பிங்கலை, பத்து, இடைகலை, நிலையில், தானதன, தாந்தன, நாடிகளுள், ஒன்று, விடும், சுழு, யும், சுவாசம், முனை, காற்றுக்கு, பெருமாளே, பூங்கொடி, அருளாதோ, கொண்ட, சிவயோக, தாளம், என்றும், பெயர்