பாடல் 124 - பழநி - திருப்புகழ்

ராகம் - ஹிந்தோளம்; தாளம் -
அங்கதாளம் - 5
தக திமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 - திஸ்ர ரூபகம்
தக திமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 - திஸ்ர ரூபகம்
தனதன தனன தான தனதன தனன தான தனதன தனன தான ...... தனதான |
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர் ஒருகுண வழியு றாத ...... பொறியாளர் உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின் வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி மறைவரி னனைய கோல ...... மதுவாக மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாத ...... மருள்வாயே திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல் திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன் திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத திருநட மருளு நாத ...... னருள்பாலா சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி தொழமுது பழநி மேவு ...... பெருமாளே. |
ஒருவர் சொல்வதை மற்றவர் இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய மத ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை உடையவர்களுமான மக்கள் இந்த உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்து கொண்டே வந்து, இறுதியாக அனைவரும் யமனுடைய நரகத்தில் சென்று வீழ்வர். அந்த நிலை முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து, நல்வினை, தீவினை என்ற இருவினைக் கடலில் உளைந்து மறைவர். இத்தகைய மனிதர்களின் கோலம் அவ்வாறாக, (யான் அவ்வாறு அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக திருநீற்றைத் தந்து, நல்ல நிலையை நான் அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. திரிபுரம் எரிந்து விழவும், கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் எரிந்து விழவும் புன்சிரிப்பாலும், நெற்றியிலுள்ள திருக்கண்ணாலும் அருள் புரிந்த மெய்ஞ்ஞான குருநாதனும், லக்ஷ்மி, ஸரஸ்வதி, மஹேஸ்வரி ஆகியோரது தலைவர்களாகிய திருமால், பிரமன், ருத்திரன் ஆகியோர் ஓதிப் போற்ற திரு நடனம் ஆடி அருளிய நாதன் சிவபிரான் அருளிய குழந்தையே, தேவர்கள் தலைவன் இந்திரனும், பிரமனும், திருமாலும் முறையிட்டு உன்னடி பணிய, அசுர கோடிகள் தூளாகுமாறு செலுத்திய மெய்ஞ்ஞான சக்தி வேலாயுதனே, சுகம் பாலிக்கும் குறமகள் வள்ளியின் மணவாளன் என்று வேதங்கள் பலவும் போற்றிப் புகழ, பழமை வாய்ந்த பழநிப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 124 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, விழவும், மெய்ஞ்ஞான, அருளிய, எரிந்து, பெருமாளே, ளாடி, அருளி, தகிட