பாடல் 1218 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தான தானன, தனதன தான தானன தனதன தான தானன ...... தனதான |
இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி னிடமது லாவி மீள்வன ...... நுதல்தாவி இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென எறிவன காள கூடமு ...... மமுதாகக் கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங் கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை கசடற வேறு வேறுசெய் ...... தருள்வாயே ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு முததியில் வீழ வானர ...... முடனேசென் றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர் உணருப தேச தேசிக ...... வரையேனற் பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி பரிபுர பாத சேகர ...... சுரராஜன் பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே. |
காதில் உள்ள இரண்டு குண்டலங்களின் மீதிலும் தாவிப் போர் புரிபவனவும், கூந்தலின் நிழலிடத்தில் உலாவி மீண்டு வருவனவும், நெற்றியின் மேலும் கீழுமாக ஏறியும் இறங்குபவனவாயும் உள்ள, காம சாஸ்திரத்தை எடுத்து உரைக்கும் கூர்மையான வேல் பாய்வது போலப் பாய்வனவும், ஆலகால விஷமும் (அவற்றோடு ஒப்பிடும்போது) அமுது என்று சொல்லும்படியான குணத்தை உடையவையும், கரிய நீல நிறமுள்ளவனவும் ஆகிய கண்களை உடைய அழகிய நாடகக் கணிகையர் தருகின்ற புணர்ச்சி இன்பத்தில் முழுகி வாடிக் கிடக்கும் திக்கற்றவனாகிய தனியேனாகிய நானும், நற்கதி பெறுவதற்காக, தன்னிகரற்ற கடவுள், உயிர், தளை (கட்டு) எனப்படும் இம் மூன்றின் இலக்கணங்களை ஐயம் இல்லாத வகையில் தனித்தனியாக விளக்கி எனக்கு அருள் செய்வாயாக. (ராவணனுடைய) ஒரு பத்து பாரமான மணி முடிகளும், இருபது மேருவைப் போன்ற தோள் மலைகளும் கடலில் விழவும், குரங்குப் படையுடன் போய் ஒப்பற்ற அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே, திருநீறு அணிந்த சிவபெருமான் உணர்ந்து கொள்ள உபதேசம் செய்த குரு மூர்த்தியே, வள்ளி மலையில் தினைப் புனத்தே, (உன்னைக்) குல தெய்வமாகப் போற்றித் துதித்த, காட்டில் உள்ள வேடர்கள் வளர்த்த, அழகிய வள்ளி நாயகியின் சிலம்பு அணிந்த திருவடிகளைத் தலையில் சூடினவனே, தேவர்களுக்கு அரசனான இந்திரன் பொன்னுலகில் குடி ஏறுவதற்காக வேலைச் செலுத்திய முருகனே, மயில் வாகனனே, ஆனந்த நிலையில் இருக்கும் ஞான யோகிகளின்* பெருமாளே.
* துங்கபத்திரை நதிக்கு வட திசையில் உள்ள ஞானபுரத்தில் கெளசிக முனிவர் தத்துவ ஞானம் கைகூட வேண்டி சரவணபவ மந்திரத்தைத் தியானித்துக் குகப் பெருமானை நோக்கிக் கடுந் தவம் புரிந்தார். கந்தக் கடவுள் ஞானாசாரிய மூர்த்தியாகத் தோன்றிச் சிவஞானம் எனப்படும் பதி ஞானமே தெளிவை உண்டாக்கும் என்று உபதேசித்தார். அதனால் ஞான தேசிக மூர்த்தி எனப் பெயர் பெற்றார்.இந்தப் பதி ஞானம் தான் பரம ஞானம், சிவ ஞானம், குக ஞானம், தத்துவ ஞானம், திருவடி ஞானம், அருள் ஞானம், அத்துவித ஞானம், மெய்யுணர்ச்சி எனப் பலவாறு கூறப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1218 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஞானம், உள்ள, தனதன, தானன, வள்ளி, அணிந்த, தத்துவ, செலுத்திய, எனப், எனப்படும், தேசிக, பெருமாளே, அழகிய, கடவுள், அருள்