பாடல் 1212 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
யமுனா கல்யாணி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தானனா தத்த தானனா தத்த தானனா தத்த ...... தனதான |
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம மானபூ வைத்து ...... நடுவேயன் பானநூ லிட்டு நாவிலே சித்ர மாகவே கட்டி ...... யொருஞான வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி ...... யளிபாட மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர வாளபா தத்தி ...... லணிவேனோ மூசுகா னத்து மீதுவாழ் முத்த மூரல்வே டிச்சி ...... தனபார மூழ்குநீ பப்ர தாபமார் பத்த மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு வேகவே தித்து ...... வருமாசூர் வீழமோ திப்ப ராரைநா கத்து வீரவேல் தொட்ட ...... பெருமாளே. |
உன் மீது ஆசை மிகுந்த பக்தியை உடைய நான் மனம் எனப்படும் தாமரை மலரை வைத்து, இடையில் அன்பு என்னும் நாரைக் கொண்டு, நாக்கு என்னும் இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து, அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம் என்னும் நறுமணத்தைத் தடவி, அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும், அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு என்ற வண்டு மொய்த்துப் பாடவும், மாத்ருகா மந்திர* மாலையான இந்தப் பூமாலையை அழகிய பவளம் போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? சிள்வண்டுகள் மொய்க்கும் காட்டிலே வாழ்கின்ற, முத்தை நிகர்த்த அழகிய பற்களை உடைய, வேடர் குலப்பெண் வள்ளியின் மார்பகத்தில் முழுகி அழுந்திக் கிடக்கும், கடப்ப மாலையைச் சிறப்பாக அணியும், மார்பை உடைய ஐயனே, வலிமையான ஐராவத யானை வளர்த்த மயிலின் சாயலுள்ள தேவயானையின் மணவாளனே, அலை வீசும், மீன்கள் மிகுந்த, கடல் பேரொலியோடு வெந்து வற்ற, தேவர்களை வருத்தித் துன்புறுத்தி வந்த பெரும் சூரன் அழிபட்டு விழ, தாக்குதல் செய்து, பருத்த அடிப்பாகத்தை உடைய கிரெளஞ்சமலை மீது வீரம் பொருந்திய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.
* வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட மாத்ருகா புஷ்ப மாலை.சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்த மந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1212 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தானனா, என்னும், மீது, மாத்ருகா, தத்த, அழகிய, மாலை, அந்த, பெருமாளே, பத்த, வைத்து, புஷ்ப, மிகுந்த