பாடல் 119 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தனதான |
இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனி லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள் கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே சிலைதரு குறவர்ம டந்தை நாயகி தினைவன மதனிலு கந்த நாயகி திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ அயிலயி லதனையு கந்த நாயக குருபர பழநியி லென்று மேவிய ...... பெருமாளே. |
விளங்குகின்ற சந்தனக் கலவைகளின் நறுமணம் வீச, கஸ்தூரியை (தம் மார்பில்) மகிழ்ச்சியுடன் பூசியும், வெற்றிலைச் சுருளையும் பாக்கின் பிளவையும் உண்டு, அதை இன்பகரமான பேச்சுடன் புணர்ச்சியின் போது (தங்களிடம்) வந்துள்ள அவரவருடைய வாயில் இடுபவரும், பற்பல எண்ணங்களை உடைய விலைமாதர்கள் மீதுள்ள பற்றினை நான் விட்டு விடும் அந்த நாள் எது என்று சொல்லுவாயாக. (வள்ளி) மலை தந்த குறவர் மகளான வள்ளி நாயகி, தினைப் புனத்தில் நீ விருப்பம் கொண்ட நாயகியின் திரண்ட மார்பகங்களைத் தழுவிய நாயகனே, சிவலோகனே. கொலைத் தொழிலைச் செய்யும் அசுரர் கூட்டத்தினர் மாண்டு அழியும்படி கூரிய வேலாயுதத்தை மகிழ்ந்து தோளில் ஏந்தும் நாயகனே, குரு மூர்த்தியே, பழனி மலையில் என்றும் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 119 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்த, கந்த, நாயகி, தானன, நாயகனே, வள்ளி, பெருமாளே, நாயக