பாடல் 1189 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானதன தான தத்த தானதன தான தத்த தானதன தான தத்த ...... தனதான |
மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும் வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல் மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும் வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து வேறுபடு மேனி சற்று ...... மழியாதே வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து மேவுமிரு பாத முற்று ...... வரவேணும் ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே. |
பகைமையுடன் சண்டை செய்யும் யமனை நிகர்த்து ஆகாயத்தில் எழுகின்ற அழகிய சந்திரனுக்கும், கடல் தூக்கம் கொள்ளாது (அலை ஒலித்துக் கொண்டே) இருக்கும் அந்த நிலைக்கும், வசை மொழிகளையே பேசிக் கொண்டிருக்கும் வஞ்சனை கொண்டுள்ள மாதர்களுக்கும், இடையர் குழல் ஊதும் இசைக்கும், வாய்ந்துள்ள இளம் வாடைக் காற்றுக்கும், அதனாலே படுக்கை வேறுபடுவதற்கும் (தனித்திருப்பதற்கும்), (இவைகள் காரணமாக) எனது பேதைப் பெண் இளைத்து நிறம் மாறி போன உடல் கொஞ்சமும் கெடாதவாறு, வேடப் பெண்ணாகிய வள்ளியின் பொருட்டு காம நோய் தீரும்படி திருவிளையாடல்களைச் செய்து விளங்கும் உன் இரண்டு திருவடிகளுடன் பொருந்தி (இப்பேதையிடமும்) நீ வர வேண்டும். ஆறு வகைக் கெட்ட குணங்கள்* நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களும் ஆகிய அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்திய ஆறுமுகப்பிரானே, குறப் பெண் வள்ளியின் கணவனே. கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் அடக்கி, வாசுகிப் பாம்பின் வாயை அடக்கிக் கூச்சலிடும் மயில் மீது ஏறி விளங்கும் இளையோனே, மிக்க சினத்துடன் மேருமலையை பொடியாகும்படி கோபித்த சேவற் கொடியோனே, கடப்பமாலையை நெருக்கமாய் அணிந்த திரண்ட தோளனே, கூடியுள்ள வலிமையால் வெற்றி மிக்குள்ள சூரர்கள் கொண்டு போய் அடைத்த தேவர்களின் சிறையை நீக்கிய பெருமாளே.
* ஆறு கெட்ட குணங்கள்: காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சர்யம். இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.சந்திரன், கடல் ஓசை, வசை பேசும் மாதர், குழல் ஓசை, வாடைக் காற்று, தனிப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1189 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்த, பெண், படுக்கை, விளங்கும், கெட்ட, வாடைக், வள்ளியின், கடல், வேறுபடு, நீறுபட, டக்கி, பெருமாளே, குழல்