பாடல் 1188 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
சங்கராபரணம்
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தாந்தான தந்தன தந்தன தாந்தான தந்தன தந்தன தாந்தான தந்தன தந்தன ...... தனதான |
மாண்டாரெ லும்பணி யுஞ்சடை யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை வான்பூத லம்பவ னங்கனல் ...... புனலான வான்பூத முங்கர ணங்களு நான்போயொ டுங்கஅ டங்கலு மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை ...... யருளாயேல் வேண்டாமை யொன்றைய டைந்துள மீண்டாறி நின்சர ணங்களில் வீழந்தாவல் கொண்டுரு கன்பினை ...... யுடையேனாய் வேந்தாக டம்புபு னைந்தருள் சேந்தாச ரண்சர ணென்பது வீண்போம தொன்றல என்பதை ...... யுணராதோ ஆண்டார்த லங்கள ளந்திட நீண்டார்மு குந்தர்த டந்தனில் ஆண்டாவி துஞ்சிய தென்றுமு ...... தலைவாயுற் றாங்கோர்சி லம்புபு லம்பிட ஞான்றூது துங்கச லஞ்சலம் ஆம்பூமு ழங்கிய டங்கும ...... ளவில்நேசம் பூண்டாழி கொண்டுவ னங்களி லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி போந்தோல மென்றுத வும்புயல் ...... மருகோனே பூம்பாளை யெங்கும ணங்கமழ் தேங்காவில் நின்றதொர் குன்றவர் பூந்தோகை கொங்கைவி ரும்பிய ...... பெருமாளே. |
(தக்ஷயாகத்துக்குப் பின்) இறந்து பட்ட திருமால், பிரமன் முதலோருடைய எலும்பை அணிந்தவரும், ஜடாமுடிகொண்ட தலைவரும் ஆகிய சிவபெருமான் உன்னை வணங்க, நீ உபதேசித்த பிரணவப் பொருளை, விண், பூமி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய பெரிய ஐம்பூதங்களும், (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) எனப்படும் நான்கு கரணங்களும், நான், எனது - என்னும் அகங்கார மமகாரமும் நீங்கி ஒடுங்க, இங்ஙனம் எல்லாம் இறந்துபட்டால் விளங்குவதான அந்த ஒப்பற்ற ஒரு பொருளை நீ எனக்கு அருளாவிட்டால் (அதற்குப் பதிலாக) வேண்டாமை என்னும் ஆசை நீக்கமான மன நிலை ஒன்றை நான் அடைந்து, என் மனம் மீண்டும் பல திசைகளில் ஓடாது அமைதிபெற்று உனது திருவடிகளில் விழுந்து ஆசையுடனே உள்ளம் உருகும்படியான அன்பு நிலையை நான் உடையவனாகி, அரசே, கடப்ப மாலை அணிந்த காரணனே, உன் திருவடியே சரணம் என்னும் அந்த வழிபாடு வீணாகப் போகும்படியான ஒன்று அன்று என்பதை உணரமாட்டேனோ? உலகத்தை எல்லாம் ஆள்பவர், மூவுலகையும் தமது திருவடி இரண்டினால் அளக்கவேண்டி நீண்ட உருவம் (விஸ்வரூபம்) எடுத்தவர், முகுந்தர், மடுவில் அன்றொரு நாள் உயிரே போய்விட்டது என்று முதலையின் வாயில் அகப்பட்டு, அங்கே ஒரு மலைபோன்ற (கஜேந்திரன் என்னும்) யானை (ஆதிமூலமே என்று) கூச்சலிட, அப்பொழுது ஊதின பரிசுத்தமான பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கை, மலரை ஒத்த வாயில் முழக்கம் செய்து சங்கின் ஓசை அடங்குவதற்குள் அளவில்லாத அன்பு பூண்டு சுதர்ஸன சக்கரத்தை ஏந்தி (மடு இருந்த) வனத்தை அடைந்து (அந்த யானையை) ஆண்டருள தான் மாத்திரம் தனியே வந்து அபயம் தந்தோம் என்று உதவிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே, அழகிய தென்னம்பாளை எங்கும் நறு மணம் வீசுகின்ற இனிய பூஞ்சோலையில் இருந்த ஒப்பற்ற (வள்ளி) மலை வேடர்களின் அழகிய மயில் போன்ற வள்ளியின் மார்பகங்களை விரும்பிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1188 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, என்னும், அந்த, தாந்தான, நான், ஒப்பற்ற, அடைந்து, வாயில், அழகிய, இருந்த, எல்லாம், அன்பு, மனம், வேண்டாமை, வான்பூத, என்பதை, பெருமாளே, பொருளை, ஆகிய, தகதிமி