பாடல் 1185 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனன தனதன தனத்தா தன தனன தனதன தனத்தா தன தனன தனதன தனத்தா தன ...... தனதான |
மதன தனுநிக ரிடைக்கே மன முருக வருபிடி நடைக்கே யிரு வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும் வகுள ம்ருகமத மழைக்கே மணி மகர மணிவன குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும் அதர மதுரித மொழிக்கே குழை யளவு மளவிய விழிக்கே தள வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும் அழகு திகழ்தரு நுதற்கே யந வரத மவயவ மனைத்தூ டினு மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே உததி புதைபட அடைத்தா தவன் நிகரி லிரதமும் விடுக்கா நகர் ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர உபய வொருபது வரைத்தோள் களு நிசிச ரர்கள்பதி தசக்¡£ வமு முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான திதமி லவுணர்த மிருப்பா கிய புரமு மெரியெழ முதற்பூ தர திலத குலகிரி வளைத்தா னும ...... கிழவானோர் திருவ நகர்குடி புகச்சீ கர மகர சலமுறை யிடச்சூ ரொடு சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே. |
மன்மதனுடைய உடலுக்கு ஒப்பான (உருவம் இல்லாத) இடுப்பின் மீதும், மனம் உருகும்படியாக வருகின்ற பெண் யானையின் நடையின் மீதும், இரண்டு தாமரை மலர் போன்ற, சிலம்பு அணிந்த மலரடிகள் மீதும், வண்டுகள் வாழ்கின்றதும் மகிழம் பூவும் கஸ்தூரியும் அணிந்துள்ளதுமான, மேகம் போன்ற நீண்ட கூந்தலின் மீதும், ரத்தினங்கள் பதித்த மகர மீன் போன்ற குண்டல அணியின் மீதும், இள மகளிர்களின் மலர் மொட்டுப் போலக் குவிந்துள்ள மார்பகத்தின் மீதும், பாற்கடல் அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலின் மீதும், இனிய பேச்சின் மீதும், குண்டலங்கள் வரைக்கும் நீண்டுள்ள கண்களின் மீதும், முல்லை மலர் போன்ற ஒப்பற்ற புன்னகையின் மீதும், குளிர்ந்த பிறைச் சந்திரன் போன்று அழகு விளங்கும் நெற்றியின் மீதும், எப்போதும் இவ்வாறு எல்லா அவயவங்களின் மீதும் மயக்கம் கொள்ளும் காமப் பித்தை ஒழித்து, என்னை நீ ஆட்கொள்ளுவதும் ஆகிய ஒரு நாள் கிட்டுமோ? கடல் புதைபடும்படி அடைத்து, சூரியனுடைய ஒப்பற்ற தேரும் வரக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த நகரமாகிய இலங்கையில், ஒரு நொடிப் பொழுதில் சூரியன் ஒளி வரும்படிச் செய்து, சீதையின் துயரம் தீரும்படி, இருபது மலை போன்ற தோள்களும், அரக்கர்களுடைய தலைவனாகிய ராவணனுடைய பத்து கழுத்தும் உருண்டு மாண்டு விழ ஒப்பற்ற அம்பை விட்டவனாகிய (ராமனாகிய) திருமாலும், மவுன ஞான, நிலை இல்லாத அவுணர்களுடைய* இருப்பிடமாயிருந்த திரிபுரங்களும் எரிபட்டு அழியும்படி, மலைகளுள் முதன்மை வாய்ந்ததும், நெற்றித் திலகம் போல சிறப்பான மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபெருமானும் மகிழ்ச்சி கொள்ளும்படியும், தேவர்கள் செல்வம் நிறைந்த பொன்னுலகுக்கு குடி போகும்படியும், அலைகளும், மகர மீன்களும் கொண்ட கடல் முறையிட்டு ஓலமிடும்படியும், சூரனுடன், உச்சிகளை உடைய எழு கிரிகளும் பொடிபட்டு அழிய வேல் கொண்டு மோதிய பெருமாளே.
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1185 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதும், தனதன, ஒப்பற்ற, மலர், தனத்தா, கடல், அசுரர்கள், இல்லாத, அழகு, பெருமாளே