பாடல் 1186 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
தோடி
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன ...... தனதான |
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும் வடிவாயுடல் நடமாடுக ...... முடியாதேன் மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற மகிழ்ஞானக அநுபூதியி ...... னருள்மேவிப் பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ பரிபூரண கிருபாகர ...... முடன்ஞான பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு சசிசூரியர் சுடராமென ...... வொருகோடிச் சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக சதிநாடக மருள்வேணிய ...... னருள்பாலா விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி வெகுமாலுற தனமேலணை ...... முருகோனே வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக வெயில்வீசிய அழகாதமிழ் ...... பெருமாளே. |
மன்மதன் செலுத்திய மலர் அம்புகளால் பட்டும், நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளால் பட்டும், மண், நீர் முதலிய பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் பட்டும் வடிவமான இந்த உடலுடன், இந்த உலகில் நடமாட முடியாதவனாகிய நான் மனத்திலுள்ள மாயையும், நல்வினை தீவினை என்ற இரு முற்றிய வினைகளும் ஒழிய, பழமையாக வரும் ஆணவம் என்ற மலம் வேரோடு அற்று வீழ, மகிழத்தக்க, உள்ளத்தில் விளங்கும், அனுபவ ஞானம் ஆகிய அருளை அடைந்து, உன் திருவடியை அடைந்த அடியார்களுடன் நானும் சேர்ந்து விளையாட, அடியேன் எதிரில் நிறைந்த கருணையுடன் ஞானம் என்னும் குதிரையாகிய மயில் மீது அழகுடன் ஏறி, தேவர்கள் பூமாரியை உன் திருவடிகளின் மேல் பொழிய பல கோடிக்கணக்கான வெண்ணிலவின் ஒளி வீச நீ வருவாயாக. நூறு கோடி வெண்ணிற மாதர்கள் கடல் அலைகளைப் போல் சாமரங்கள் வீச, பூரண சந்திரனும், சூரியனும் தீப ஒளியாய்ச் சுடர் வீச, ஒரு கோடிக்கணக்கான, சடைமுடி தாங்கிய முநிவர்கள் சரணம் என்று வணங்க, வேதியர்கள் வேதங்களை ஓதிட, தாளத்துடன் கூடிய நடனத்தை ஆடிய ஜடாமுடி தாங்கும் (நடராஜராம்) சிவபெருமான் அருளிய குழந்தையே, உயிர்களுக்கு எல்லாம் ஆயுளை விதிக்கும் பிரமனின் தங்கை*, என் உள்ளத்தில் வீற்றிருக்கும் வள்ளிநாயகி மிக்க ஆசைப்படும்படி அவளின் மார்பினை அணைந்த முருகனே, ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீலவண்ணத்து திருமாலின் மருகனே, ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, தமிழர்களின் பெருமாளே.
* பிரமன் திருமாலின் மைந்தன். வள்ளி திருமாலின் புத்திரியாகிய சுந்தரவல்லியின் மறு பிறப்பு. எனவே வள்ளி பிரமனின் தங்கை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1186 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதானன, பட்டும், திருமாலின், வள்ளி, எல்லாம், பிரமனின், கோடிக்கணக்கான, உள்ளத்தில், பெருமாளே, நல்வினை, தீவினை, ஆகிய, ஞானம்