பாடல் 117 - பழநி - திருப்புகழ்

ராகம் - .....; தாளம் -
தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த ...... தனதான |
இருகனக மாமேரு வோகளப துங்க கடகடின பாடீர வாரமுத கும்ப மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்க னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல் பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப் பிணியினக மேயான பாழுடலை நம்பி உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ கருணையுமை மாதேவி காரணிய நந்த சயனகளி கூராரி சோதரிபு ரந்த கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ...... யருள்பாலா கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனே பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா பலமலர்க ளேதூவி யாரணந வின்று பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே. |
இரண்டு பொன் மயமான பெரிய மேரு மலையோ? கலவைச் சந்தனம் அணிந்த, பரிசுத்தமான, பச்சைக் கற்பூரம் அணிந்த, கச்சை அணிந்த அமுத கலசத்துக்கு சமானமென்று கூறப்படும் இளநீரோ? துதிக்கையை உடைய மலை எனப்படும் யானை போன்ற இரண்டு குன்றுகளோ? சிறந்த மலர்களையே கணைகளாகக் கொண்ட மன்மதனுடைய அழகிய கி¡£டம்தானோ? என்று ஒப்பிட்டுச் சொல்லும்படி மிக வளர்ந்துள்ள இள மார்பகங்களையுடைய மின்னலைப் போன்ற பொது மகளிரின் காம வலையில் அகப்பட்டு, அந்த மோகம் குறைவு படாமல், தாராள மனத்துடன் ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும்* நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி, தினமும் (இங்ஙனம்) இரந்து நிலை காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி, உயிரைப் பயனிலதாக நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ? கருணை நிறைந்த பார்வதி, எல்லாவற்றுக்கும் காரணமானவள், ஆதிசேஷன் மேல் துயில் மகிழ்ச்சியுடன் கொள்ளும் திருமாலின் சகோதரியானவள், திரிபுரம் எரித்த சிவபெருமானுடன் (நடனத்தில்) போட்டியிட்ட காளி, (இமய) மலை அரசின் குமாரி பெற்ற குழந்தையே, கருடனோடு போட்டியிடுவது போல உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும் பெரிய மாட மேடைகளும் துலங்குகின்ற கலிசை என்னும் ஊரில் உள்ள காவேரி சேவகன்** என்ற மன்னனிடத்தில் அன்பு பூண்டவனே, கடலிடையே பாதக அசுரர்கள் விழுந்து கதறவும், இந்திரனுடைய உள்ளத்து எண்ணம் பலித்தது என்று அவன் மகிழ்ந்து (தேவலோகத்துக்குச்) செல்ல, மயில் மீது எழுந்தருளி வந்த குமரேசனே, பல விதமான மலர்களைத் தூவி, வேதங்களை ஓதித் துதி செய்து தேவர்கள் சூழ நின்று நாள் தோறும் மகிழ்ந்து நிற்க, பழனி மலையின் மேல் ஒப்பற்ற சிவபெருமான் வணங்கும் பெருமாளே.
* ஐந்து தேவ தருக்கள்: சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.
** கலிசை என்னும் ஊரில் அக்காலத்துத் தலைவனாக இருந்த ஒரு அன்பன். அருணகிரிநாதரின் நண்பன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 117 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அணிந்த, தனதனன, பெரிய, தந்த, தானான, தானதன, ஐந்து, மீது, என்னும், மகிழ்ந்து, ஊரில், கலிசை, மேல், பெருமாளே, நாடொறுமி, ழுந்து, நம்பி, திரிவேனோ, வந்த, காவேரி, இரண்டு