பாடல் 116 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான |
இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள் அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள் அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல் நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே. |
சூரியன் என்று கூறும்படியும், வடவைமுகாத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால விஷம் என்று சொல்லும்படியும் கொடிய வடிவை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தின் மேலே செல்லும் சந்திரனும் வர, ரதி தேவியின் கணவனாகிய மன்மதன் முதல் நாலு மலர்ப்பாணங்களைச் செலுத்த, அவனது வெற்றிச் சின்னமான (எக்காளமாகிய) குயில் கூவ, ஏழு கடலாகிய, அவனுடைய முரச வாத்தியத்தின் இசையும், புல்லாங் குழலின் ஓசையும், மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகளின் ஓசையும் நெருங்கி வந்து அம்பு வந்து பாய்வது போல இரு செவிகளிலும் பாய்ந்து போராடவும், காம வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை மொழிகளைப் பேசி நகையாடவும், அரகர என்று இப்பெண் படுகின்ற துன்பத்தை அளவிட்டுச் சொல்லுவது மிக மிகக் கடினம். அமுதமும் மயிலும் போன்று எப்போதும் இருக்கும் என் மகள் இந்த நிலை எல்லாம் கருதி எல்லோரிடமும் பகைமைப் போர் செய்கின்றாள். மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும், மிகவும் மெலிந்து போனாள். இப்பெண் திக்கற்றவள். இவள் தலை விதி இங்ஙனம் இருந்த போதிலும் உன்னை விட்டு நீங்குதல் என்பது முடியாது. இவளை அடிமை கொள்ளுவது உன்னுடைய பொறுப்பேயாகும். காதல் தணியாத, தன்னந் தனியளாகிய அந்தப் பெண்ணை அணைந்து ஆட்கொள்ளுமாறு, இனிமையுடன் ஓங்கார வடிவத்தோடு கூடிய மயிலின் மேல் (முருகா) நீ வந்து அருளுக. மலையில் பசுக் கூட்டங்கள் எல்லாம் துதி செய்து தம்மைச் சூழந்து வர, ஒப்பற்ற மருத மரத்தையும், போர் புரிந்து கொல்வதற்காக வண்டி உருவமாய் வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொன்று, பசுக்கள் அழியுமாறு மழை பெய்வது தடைபட, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த, தாமரை போன்ற கரங்களை உடைய கோபாலனின் மருகனே, மாசு இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச எழுந்தருளும் குமரி, கெளரி, காளி, பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி, நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே, கடலும், மலையும், அசுரர் கூட்டமாகிய பெரிய படையும் தவிடு பொடியாகவும், தேவர்கள் துன்பம் நீங்கவும், வேலாயுதத்தைச் செலுத்திச் சண்டை செய்த தாமரை மலர் போன்ற திருக் கரங்களை உடையவனே, முருகனே, நான்கு வேதங்களிலும் வல்ல ஞான ஒளியினருக்கு அணிகலமாக விளங்குபவனே, மயில் வீரனே, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவைச் சேறு நிரம்பி வளர்கின்ற மார்பகங்களை உடைய மங்கை, குறப் பெண்ணாகிய வள்ளி மகிழும் இன்பத் திருவிளையாடல்களைச் செய்தவனே, வாக்கு வல்லமை நிறைந்த, சுவை நிரம்பிய நூலாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராக வந்து) உலகுக்குத் தந்தருளியவனே, பழனிப் பதியில் எழுந்தருளியுள்ள கோலாகலமானவனே, தேவர்களின் பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.சந்திரன், குயில், மன்மதன், மலர்ப் பாணங்கள், கடல் ஓசை, குழல் ஓசை, மாடுகளின் மணி ஓசை, மகளிர் வசைப் பேச்சு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 116 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, வந்து, மிகவும், தானான, எல்லாம், போர், இப்பெண், தாமரை, மூன்று, உடைய, கரங்களை, புரிந்து, உள்ள, சொல்லும்படியும், பெருமாளே, அவசமுற, கொடிய, மன்மதன், ஓசையும், குயில், மாடுகளின்