பாடல் 1159 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன ...... தனதான |
செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள் தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச் சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின் றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச் சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர் தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன் தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே. |
சிவந்த தீயில் புகை எழும்படியாக ஓம குண்டங்கள் அமைத்து யாகங்களைச் செய்த சோமயாஜிகளும்* கூட சரணாகதி என்று (தங்கள்) இரு திருவடிகளில் விழும்படி போர் செய்ய வல்லதும், மனதில் அழுந்திய மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை, காமம், குரோதம், உலோபம் எனப்படும் எட்டு வகைப்பட்ட துர்க்குணங்களும் பொறிகளின் சபலங்களும் தாக்கித் தம்மை ஆட்டாத சில வலிய வன்மையை உடைய தவ ஒளியைக் கொண்ட வீரர்களுடன் மாறுபட்டு அவர்களை வென்று நின்று (அவர்களுடைய) உடலை வெட்டும்படியான கூரிய கண்களை உடைய (விலை) மாதர் மீது முற்றும் காம மயக்கம் கொண்டவனாய், மனம் அழிந்து போய் அஞ்ஞானம் என்ற இருள் வந்து மூடாத வகையில், பகையின்மை எனப்படும் அந்தக் குணம் கடந்த ஞானோதய அழகு ஒளியை நான் ஆராய்வதற்கு, நல்ல அன்பை என் மீது வைத்து திருவருளுக்கு இடமான ஒப்பற்ற உனது திருவடியை எனக்கு தந்தருளக் கூடாதோ? வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை, துளசி, ஆத்தி வணங்கத் தகுந்த கங்கைநதி, சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை, (இவைகள் விளங்கும்) ஜடாமுடியில் ஈகைக் கொடிப்பூ, எருக்க மலர் அணிந்துள்ளவர், பாம்பைக் குண்டலமாக அணிந்தவர், பினாகம் என்னும் வில்லை ஆயுதமாக ஏந்தியவர் (ஆகிய சிவபெருமானும்), நன்கு பொருந்திய சங்கு, சக்கரம், கதை இவைகளைக் கையில் ஏந்திய திருமாலும், எங்களுடைய செல்வமே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருள்க என்று வேண்ட அசுரர்கள் தலைவனான சூரன் பற்றுக் கோடின்றி வேதனைப்பட, வேதத்துக்கு இருப்பிடமான பிரமன் பயந்து நிற்க, கிரெளஞ்ச மலை பிளப்புண்டு சிதறி விழ, வீரத்துக்கு இருப்பிடமாய் வேகமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.
* சோம யாகம் = தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை.இதைச் செய்தவர்கள் சோமயாஜிகள். சோமயாஜிகளும், தவ வீரர்களும் கூடப் பெண்களால் மதி மயங்குவர் என்பது கருத்து.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1159 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தத்தன, தானாதன, தந்த, உடைய, மீது, மலர், எனப்படும், சங்கு, குண்ட, ஞானோதய, பெருமாளே