பாடல் 1160 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் ...... தனதான |
சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித் தூறுசிவப் பேறுவிழிக் ...... கணையாலே தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத் தேறலெனக் கூறுமொழிச் ...... செயலாலே ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத் தாலுமிதத் தாலும்வளைப் ...... பிடுவோர்மேல் ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற் றாளிணையைச் சேரஎனக் ...... கருள்வாயே காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக் காயஎரித் தேவிதியிற் ...... றலையூடே காசினியிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத் தேறிவகித் தூருதிரைக் ...... கடல்மீதில் ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற் றாடியிடத் தேயுமைபெற் ...... றருள்வாழ்வே ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட் டாதுலருக் காறுமுகப் ...... பெருமாளே. |
சேல் மீனை வெட்கப்படச் செய்து, விஷம் மிகக் கொண்டதாய், மானைக் கோபித்து அவமானப்படுத்தி, செந்நிறம் ஊறி மேற்காட்டும் கண் என்னும் அம்பு கொண்டும், தேன் சுவையில் தோய்ந்து, வெல்லப் பாகுக்கு ஒப்பாகி, நிறையமுத பானம் என்று சொல்லத் தக்கதான மொழிகளின் திறத்தாலும், ஆலிலை போன்ற வயிற்றாலும், கூந்தலாலும், வாயிதழாலும் இன்பம் தந்து (ஆண்களின் மனத்தை) வளைத்து இழுப்பவர்களான விலைமாதர் மீதுள்ள காமப் பற்றைத் தூர எறிந்து, புகழ் பெற்று அன்புக்கு இடமான (உனது) நல்ல திருவடியிணைகளைச் சேருவதற்கு எனக்கு அருள் செய்வாயாக. யமனை உண்மைக்கு இருப்பிடமான தனது திருவடியைத் தூக்கி உதைத்தும், மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய கபாலம் கொண்டு பூமியில் உள்ளோர் காணும்படி யாசித்தும், ஒப்பற்ற நிலவைச் சடையில் தரித்தும், ரிஷபத்தில் ஏறி அமர்ந்தும், அசைந்து வரும் அலை வீசும் கடல் மீது எழுந்த ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தும், (எதிர்த்து வந்த) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து உடுத்தும், சுடு காட்டை அடைந்து அங்கே நடனம் புரிபவருமான சிவபெருமானது இடப் பாகத்தில் உறையும் உமா தேவி பெற்றருளிய செல்வமே, கடலையும், சூரனையும், ஏழு மலைகளையும், இவைகளின் மீது பட்டு அவை அழிந்து போகும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, ஏழைகளுக்கு உகந்த, ஆறுமுகப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1160 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதனத், மீது, பெருமாளே, தரித்தும்