பாடல் 1157 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - குந்தலவராளி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனதனன தான தானன தனதனன தான தானன தனன தனதனன தான தானன தந்ததான |
சுருதி வெகுமுகபு ராண கோடிகள் சரியை கிரியைமக யோக மோகிகள் துரித பரசமய பேத வாதிகள் ...... என்றுமோடித் தொடர வுணரஅரி தாய தூரிய பொருளை யணுகியநு போக மானவை தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ...... நின்ப்ரகாசங் கருதி யுருகியவி ரோதி யாயருள் பெருகு பரமசுக மாம கோததி கருணை யடியரொடு கூடியாடிம ...... கிழ்ந்துநீபக் கனக மணிவயிர நூபு ராரிய கிரண சரண அபி ராம கோமள கமல யுகளமற வாது பாடநி ...... னைந்திடாதோ மருது நெறுநெறென மோதி வேரோடு கருது மலகைமுலை கோதி வீதியில் மதுகை யொடுதறுக ணானை வீரிட ...... வென்றுதாளால் வலிய சகடிடறி மாய மாய்மடி படிய நடைபழகி யாயர் பாடியில் வளரு முகில்மருக வேல்வி நோதசி ...... கண்டிவீரா விருதர் நிருதர்குல சேனை சாடிய விஜய கடதடக போல வாரண விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத விமலை நகிலருண வாகு பூதர விபுத கடககிரி மேரு பூதர விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே. |
வேதமும், பலவிதமான கோடிக் கணக்கான புராணங்களும், சரியை மார்க்கத்தில்* இருந்து கோவில்களுக்குத் தொண்டு செய்பவர்களும், கிரியை மார்க்கத்தில் நடந்து நியமமாய் மலர் தூவித் தொழுபவர்களும், மகாயோக மார்க்கத்தில் ஆசை பூண்டு யோக நிஷ்டையில் இருப்பவர்களும், கலக்கத்தைத் தரும் பர சமய பேதங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும் என்றெல்லாம் ஓடி ஓடி ஆராய்ந்து, தொடர்ந்து பற்றுதற்கும், உணர்ந்து கொள்ளுவதற்கும் அரியதானதான சுத்த நிலைப் பரம் பொருளை அண்டி நெருங்கி, என் உலக அனுபவங்களும் ஆசைகளும் தொலைந்து ஒழிய, இன்பம் தரும் ஒரு ஸ்வாமியாகிய உன்னுடைய பேரொளியை தியானித்து மனம் உருகி, எல்லா உயிரும் எனதுயிரின் பகுதிகளே என்னும் பேதமற்ற மனம் உடையவனாக, அருள் நிறைந்த மேலான இன்பப் பெரிய கடலில் கருணைமிக்க உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து, கடப்ப மலரும், பொன், இரத்தினம், வைரம் இவை விளங்கும் சிலம்பு அணிந்ததும், மேலான ஒளி வீசுவதும், அடைக்கலம் தருவதும், அழகிய இளமை விளங்குவதுமான திருவடித் தாமரைகளை (நான்) மறக்காமல் பாட உனது திருவுள்ளம் நினைவு கொள்ளாதோ? மருத மரங்களை நெறுநெறு என்று ஒலிக்குமாறு வேருடன் முறியும்படி (இடுப்பில் கட்டிய உரலோடு) மோதியும், (தன்னை விஷப்பாலை ஊட்டுவித்துக் கொல்லும்) எண்ணத்துடன் வந்த அலகைப் பேய் பூதனையின் கொங்கையைக் குடைந்து தோண்டி அவள் உயிரைப் பருகியும், தெருவில் வலிமையுடன் வஞ்சகமாகக் கொல்ல வந்த (குவலயா பீடம் என்னும்) யானை அலறிக் கூச்சலிட அதை வென்றும், பாதத்தால் வலிமை வாய்ந்த வண்டிச் சக்கரத்தை (சகடாசுரனை) எற்றி உதைத்து, தந்திரமாய் அவன் இறக்கும்படிச் செய்தும், மீண்டும் சாதாரணக் குழந்தை போலத் தவழ்ந்தும், நடந்தும், இடைச் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே, வேலாயுதத்தை ஏந்தும் அற்புத மூர்த்தியே, மயில் வீரனே, வீரர்களாகிய அசுரர்களின் குலச் சேனைகளைத் துகைத்தழித்த வெற்றியாளனே, விசாலமான தாடையை உடைய யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் புளகம் கொண்ட மார்பகங்களை உன் மார்பில் அணிகளாகத் தரித்துள்ளவனே, அழகிய, வேடர் குலத்துத் தூயவளான வள்ளியின் மார்பினை அணைத்துக் கொள்ளும் சிவந்த தோள் மலையை உடையவனே, தேவர்கள் சேனைக்கு நாயகனே, மலைகளுள் மேருமலையுடன் மாறுபட்டு போர் செய்தவனே, நூறு கோடி தேவர்களுக்குத் தம்பிரானே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1157 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மார்க்கம், தகிட, சரியை, பொருளை, தனதனன, தானன, வந்த, அழகிய, யானை, ஞானம், தொழில், மேலான, இடுதல், தரும், தம்பிரானே, கோடி, பூதர, கிரியை, மார்க்கத்தில், மனம், உணர்ந்து, என்னும்