பாடல் 1130 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனனந் தாத்த தான தத்த தனதனனந் தாத்த தான தத்த தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான |
இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும் இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி மடலவிழும் பூக்க ளால்நி றைத்த சுருளளகந் தூற்றி யேமு டித்து மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக வருபொருள்கண் டேற்க வேப றிக்கும் அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி முதுமறையின் பேச்சி நூலி டைச்சி பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி படிகொடறங் காத்த மாப ரைச்சி மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி சமரமுகங் காட்டு மால்வி டைச்சி அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி ...... பெருவாழ்வே அரியயனின் றேத்த வேமி குத்த விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே. |
சினம் தங்கிய வேலாயுதத்தை எடுத்து விஷம் முழுமையும் நிரம்பும்படி நிறைவு செய்து, இரு காதுகளையும் மோதி மீள்கின்றதும் கயல் மீன் போன்றதுமான (முன்பு சொன்ன வேலை ஒத்த) கண்கள் என்னும் வலையால் விலைமாதர் (ஆடவரை) இன்பகரமாக நோக்கி, தமது வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று, முகத்தைத் துணியால் மூடி, ரவிக்கையை அழுத்தும் மலை போன்ற இரு மார்பகங்களையும் காட்டி காம ஆசையை ஊட்டி, கிடைக்க வேண்டிய பொருள் எவ்வளவு என்று பேசி முடித்து, இதழ்கள் விரிந்த மலர்களால் நிறைக்கப்பட்ட சுருண்ட கூந்தலை விரித்து உதறி முடித்து, தெருவிடையே நின்று நிரம்பச் சிரித்து, மாறுதல் இல்லாமல் என்றும் வருவதான பொருள் உள்ளவர்களைக் கண்டதும் முன்னதாகவே பறிக்கின்ற, விலைமாதர்களின் பேச்சிலே முற்றிலும் மனம் உருகுகின்ற காமுகனாக நான் சோர்வு அடையலாமோ? உலகம் முழவதும் நிறைந்து நிற்கும் சிறந்த அழகி, வேதங்களால் பேசப்படுபவள், நுண்ணிய இடையை உடையவள், பிறைச் சந்திரன் விளங்கும், தாழ்ந்து தொங்கும் சடையை உடையவள், இரண்டு நாழி எனப்படும் படி நெல்லைக் கொண்டு (காஞ்சீபுரத்தில்) முப்பத்திரண்டு அறங்களையும்* செய்த சிறந்த பரதேவதை, ரத்தினங்களும் வைரங்களும் கோத்த வளையல்களைக் கொண்ட தோளை உடையவள், பல திக்குகளிலும் சென்று விளங்கும் விருப்பத்தை உடையவள், பெருமை மிக்க நீல நிறம் உடையவள், கொல்ல வரும் புலியின் தோலைச் சேலையாக உடுத்துள்ளவள், போர் செய்யும் முகத்தைக் காட்டும் (நந்தி என்ற) பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவள், உலகம் முழுதையும் உண்ட திருமாலுக்கு நேர் தங்கையாகிய பார்வதியின் பெருஞ் செல்வமே, திருமாலும் பிரமனும் நின்று வணங்கவும் சிறந்த தேவர் கூட்டம் சிறையனின்று மீட்சி பெறவும் வாளாயுதத்தை எடுத்தவனும், அசுரர் கூட்டம் பாழாக வேலாயுதத்தை எடுத்தவனுமாகிய பெருமாளே.
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1130 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவள், உணவு, டைச்சி, தனதனனந், சிறந்த, தாத்த, தத்த, பெரிய, முப்பத்திரண்டு, கூட்டம், விளங்கும், அநாதைகளுக்கு, தொழில், காத்தல், மருந்து, வளர்த்தல், நல்கல், அமைத்தல், நின்று, கோத்த, ளைச்சி, பேச்சி, காட்டி, வேலெ, டுத்த, பெருமாளே, முடித்து, பொருள், சென்று, வேலாயுதத்தை, உலகம்