பாடல் 113 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான |
ஆல காலமெ னக்கொலை முற்றிய வேல தாமென மிக்கவி ழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை ஆர வாணைமெ யிட்டும றித்துவி கார மோகமெ ழுப்பிய தற்குற வான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச் சால மாலைய ளித்தவர் கைப்பொருள் மாள வேசிலு கிட்டும ருட்டியெ சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர் தாக போகமொ ழித்துஉ னக்கடி யானென் வேள்விமு கத்தவ முற்றிரு தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயே வால மாமதி மத்தமெ ருக்கறு காறு பூளைத ரித்தச டைத்திரு வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே மாய மானொட ரக்கரை வெற்றிகொள் வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு வாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனே நாலு வேதந விற்றுமு றைப்பயில் வீணை நாதனு ரைத்தவ னத்திடை நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர் சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு ஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே. |
ஆலகால நஞ்சு என்னும்படியும், கொலைத் தொழில் முதிர்ந்த வேற்படை என்று சொல்லும்படியும் உள்ள மிகக் கொடிய கடைக் கண்ணாலும் மோகத்தை விளைவித்து பலவித வகையில் இளைஞர்களை நிரம்ப ஆணைகளை உண்மை போலக் கூறி, அவர்களை எங்கும் போக விடாமல் தடுத்து, பொல்லாத ஆசையை உண்டுபண்ணி, அதற்கு வசப்பட்ட பேர்வழிகளை தங்கள் கைவசப்படுத்தி, அனேக விதங்களாக, மிகவும் காம மயக்கத்தைத் தந்து, அவர்களுடைய கையில் உள்ள பொருள் அத்தனையும் வற்றிப் போகும்படி சண்டை செய்தும், மயக்கியும், சாதி வேற்றுமை இல்லாமல் மனிதர்களைத் தழுவித் திரிகின்ற விலைமாதர்களின் மீதுள்ள காமவிடாயை நீக்கி, உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற் கொண்டு, உனது இரண்டு திருவடிகளை தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக. முற்றாத இளம் பிறை, ஊமத்த மலர், எருக்கு, அறுகு, கங்கை ஆறு, பூளைப்பூ ஆகியவற்றை அணிந்துள்ள சடையைக் கொண்ட மதுரைப் பிரான் ஆகிய சொக்கேசர் ஈன்றருளிய அற்புதமான முருகோனே, மாய மானாக வந்த மா¡£சனையும், அரக்கர்களையும் வெற்றி கொண்டவரும், வாலியின் மார்பைத் தொளைக்கும் வண்ணம் வில்லை ஏந்தி அம்பை எய்தவரும், மற்போருக்குப் பொருந்திய புயத்தை உடையவருமான (ராமனாகிய) திருமாலின் மருகனே, நான்கு வேதங்களையும் சொல்லப்பட்ட முறைப்படி பயின்று நவில்கின்ற, வீணை ஏந்திய நாரதர் குறிப்பிட்டு உரைத்த (வள்ளி மலைக்) காட்டினிடையே தேடி ஓடிச் சென்று குறத்தியாகிய வள்ளியைக் கொண்டு வந்தவனே, தென்னையும் பலாவும் பழுத்து உதிர்க்கும் சோலைகள் சூழ்ந்த பழனி என்னும் ஊரில் சிறந்த ஞான பூரண சக்தியாகிய வேலாயுதத்தைத் தரித்தருளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 113 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானன, கொண்டு, பெருமாளே, உள்ள, வீணை, சாதி, முருகோனே, பூரண