பாடல் 1101 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான |
தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன் தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந் தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ் சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம் நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந் தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன் தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன் பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர் அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந் தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென் றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே. |
கோரப் பற்களையும், துன்பத்தை ஊட்டும் கொடிய மனத்தையும் உடையவனாகிய யமன் சினத்துடன் எழுந்து நெருங்கி வர, அப்போது ஒடுங்கி நீங்கிவிடும் உயிர் (என்ற யாக்கையின் நிலையாமையைத் தெரிந்தும் கூட) பொது மகளிரிடம் அடைக்கலம் நீயே என்றும், அன்புப் பேச்சுக்களைப் பேசும் அந்த மாதர்களின் இனிய மொழிகளின் சூதைத் தெரிந்த அன்றும், அதன் பிறகு கூட எப்போதும், அவர்களுக்குக் கொடுக்கப் பொருளை நாடி, (இறைவா,) உன் மீது அன்பு என்பது சிறிதளவும் இல்லாமல், இதுதான் நல்லது என்று நினைத்து, மனதில் அன்பு ஒன்றுமே இல்லாத மாதர்களின் நட்பை நிலையாக என் கருத்தில் கொண்டு துன்பப்படுகின்ற மன நோய் அதிகரிக்க, உண்மையான சுகம் என்பதே இல்லாமல் இந்த உலகில் அலைவேனோ? சுந்தர மூர்த்தி நாயனாரின் உலக பாசம் நீங்க, பரிவுடன் வந்து நான் இவனது அடிமை என்று முன்பொரு நாள் அவரைத் தடுத்து ஆட்கொண்ட முதல்வரும், தும்பை மலர், செம் பொன் இதழ்களைச் சொரிந்து விளங்கும் கொன்றைமலர், உயிர்களின் வினையைத் தொலைக்கும் எலும்பு மாலையுடன் வற்றாத கங்கை நதி, அழகு மிக்கு விளங்கும் சந்திரன், நறு மணம் மிக்குள்ள மருக்கொழுந்து, (இவைகளை) பழங்கால முதல் இப்போதும் அணிந்த சடையை உடைய அன்பு நிறைந்தவருமான சிவபெருமானுடைய மனம் குளிர இனிய சொற்களைப் பேசுபவனாகிய கந்த சுவாமி என்று தேவர்களும் அண்டங்களும் வணங்கிப் போற்றுபவனாகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1101 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனந், அன்பு, விளங்கும், இல்லாமல், இனிய, பெருமாளே, மாதர்களின்