பாடல் 1099 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான |
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை மனமகிழ வேயளித்து ...... மறவாதே உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான் உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம சரணயுக மாயனுக்கு ...... மருகோனே சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும் அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. |
இதழ்கள் விரிந்த தாமரை போன்ற வாயினின்று அரும்புகின்ற புன்சிரிப்பால் (மனத்தைக்) கவர்ந்து, மன்மதன் எழுப்பும் இன்ப நிலைக்குப் பேர் பெற்ற அழகிய மார்பினால் மலர்கள் விரித்த படுக்கையின் மேல் அணைத்து, (அச்சமயத்தில்) உண்டாகும் அமுதம் போன்ற வாயிதழ் ஊறலை மனமகிழ்ச்சியுடனே மறவாமல் தந்து, உடலும் உயிரும் ஒன்றுபட்டு இருக்க உன்னுடையது, என்னுடையது என்னும் வேற்றுமை ஒரு போதும் கொஞ்சமேனும் கூடாது என்று அழுத்தமாகப் பேசும், விலைமாதர்கள் தரும் புணர்ச்சியால் வரும் வருத்தங்களை ஒழிக்க வல்ல ஓர் உபதேச மொழியை அருள்வாயாக. விசாலமான மகுடங்களைக் கொண்ட, நாக ரத்தினம் உள்ள (காளிங்கன் என்னும் பாம்பின்) படம் நெகிழ்வு உற நடனமாடிய தாமரை அன்ன இரண்டு திருவடிகளை உடைய திருமாலுக்கு மருகோனே, சரவணப் பொய்கையில் அவதரித்த குமரனே, முருகேசனே, சக்ரவாள கிரியை வலம் வரும்படிச் செலுத்திய மயில் வீரனே, வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக் கையில் அழகு விளங்க வைத்திருக்கும் ஆறு முகனே, மெய்ஞ் ஞான உண்மை வழியில் காணக் கிடைக்கும் செல்வமே, அசுரர் குலத்தவர்களை வேருடன் வெட்டி அழித்து, நீயே அடைக்கலம் என்று ஓலமிட்ட தேவர்களைச் சிறையிலிருந்து மீள்வித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1099 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தானதத்த, என்னும், தாமரை, மருகோனே, பெருமாளே