பாடல் 1097 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
கரஹரப்ரியா
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான |
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும் இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல் இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. |
ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட நிலத்திலே, நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு, துன்பம் என்ற முளைகள் முளைக்க வளர்ந்து, பொய்த் தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து, காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு, அஞ்ஞானம் என்ற இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி, கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்புவிட்டு, இறப்பு என்னும் பழம் பழுத்து, கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின் அருமையான நிழல் அதன் பண்பிழந்து வீழ்ந்து போக, (உடல் என்னும் நிழல் தரும் மாமரக்) குடை அழிந்து போகும் முன்னரே இனிமைதரும் ஒப்பற்ற உபதேச மொழியை அருள்வாயாக. தவறான வழியையே பேசிய தக்ஷன் அமைத்த யாகசாலைக்குச் சென்ற சந்திரன், சூரியன், தேவர்கள், வஜ்ராயுதப் படையாளியான இந்திரன், திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரமன், சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால், இவர்களின் பராக்கிரமம் மறைந்தொடுங்க, அவர்களை எதிர்த்து அடக்கிய வீர உக்ர மூர்த்தியாம் சிவபிரானின் மகனே, அழகான தோகைக் கூட்டத்தை உடைய எழிலான மயிலின் மீதேறி, எட்டு மலைகளையும் வெற்றி கொண்டு வலம் வந்த வேலனே, வலிமை வாய்ந்த அசுரர்களின் சேனை அழிபட்டு முறியும்படியாக மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை வெட்டி அழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு செய்த பெருமாளே.
* ஆதபத்தி என்றால் குடை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1097 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், தனதனன, தானதத்த, குடை, அவர்களை, நிழல், உடைய, அழிந்து, ஆதபத்தி, பெருமாளே, தகிட, உடல்