பாடல் 1094 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான |
குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு குமுதமிடு பரசமய ...... மொருகோடி குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது கொடியஇரு வினையெனும ...... ளறுபோக உதறிவித றியகரண மரணமற விரணமற வுருகியுரை பருகியநு ...... தினஞான உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ் செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற் கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. |
சிதறுண்டு நெறி தவறிய ஆழமில்லாத சிற்றறிவைக் கொண்டு, கொதித்துப் பேசியும், எதிர்க் கூச்சலிட்டும் மிக்க பேரொலியை எழுப்புகின்ற பர சமயங்களைப் பற்றிய ஒரு கோடிக் கணக்கான குருடர்களுக்கும் தெரிவதற்கு அரிதான ஒப்பற்ற பொருளை நான் தெரிந்து கொள்ளுமாறு ஓடிக்கொண்டே இருக்கும் மனம், பொல்லாத நல் வினை, தீ வினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி, உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும், (மேற்சொன்ன) மனம் உருகி உனது புகழைப் பாடி அனுபவித்து நாள்தோறும் ஞான உணர்ச்சி கொண்ட கண்களைப் பெற, உன்னுடைய கஸ்தூரி மணம் கமழும் தாமரை மலர் போன்ற திருவடி இணையை இனி நான் உணர்ந்து உய்ய அருள் புரிவாயாக. கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற யுக முடிவான அந்தக் கடைசி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி, (போரின்) இறுதியில் ஆகாய உச்சியில் ஓடுகின்ற தோகைப் பட்சியான மயிலைச் செலுத்தி, (இவ்வாறாக) அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால் வகைச் சேனைகளுடன் சண்டை செய்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1094 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, மனம், வினை, அந்தக், லோகம், இருக்கும், பெருமாளே, எழுப்புகின்ற, நான்