பாடல் 1092 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான |
அனகனென அதிகனென அமலனென அசலனென அபயனென அதுலனென ...... அநபாயன் அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை மகிபஎன தினையளவு ...... ளவுமீயா மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென இருசதுர திசையிலுர ...... கமும்வீழ இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக் ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக் கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. |
பாபம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும், மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும், அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகரில்லாதவன் என்றும், அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும், வீரத்தில் அர்ச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும், இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி, பத்ம நிதி, சிந்தாமணி என்று கூறப்படும் ரத்தினம், சங்கநிதி, மேகம், காமதேநு, கற்பக விருட்சம் - இவைகளுக்கு கொடையில் ஒப்பான கைகளை உடைய அரசனே நீ என்று, தினையளவும் உள்ள பொருளைக் கொடுக்காத மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை நீங்கவும், வாக்கு அடங்கவும், மனம் ஒடுங்கவும், ஓர் உபதேசப் பொருளை தந்தருள்வாயாக. சூரியன், சந்திரன் இவர்களின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க, காலின் நகங்கள் நொச்சி இலையைப் போலிருக்க, எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும் அஞ்சி கீழே விழ, பொன்மலை (மேரு), வெள்ளிமலை (கைலாயம்), மரகதமலை (ஈங்கோய் மலை), போல் விளங்குவதான வலிய உடலைக் கொண்டதாய், விமலாதேவியின் (பார்வதியின்) திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையின் நீல நிற ஒளியை வீசி, ஆகாயத்திலுள்ள மேகங்களை வாகனமாகக் கொண்ட கடவுள் இந்திரனின் தேகம் என்று சொல்லும்படியாக உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய்*, அழகு நிரம்பி மேலே படர்ந்த தோகையைக் கொண்ட மயிலினை நடத்திச் சென்று, அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நாற்படைகளுடனும் போர் செய்த பெருமாளே.
* இந்திரனுக்கு கெளதம முநிவர் இட்ட சாபத்தால் உடலெங்கும் ஆயிரம் கண்கள் தோன்றின. அது போல மயிலின் தோகையில் கண்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1092 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், தனனதன, கொண்ட, கண்கள், சென்று, உள்ள, அற்றவன், பெருமாளே