பாடல் 1091 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான |
அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென அமுதமொழி பதறியெழ ...... அணியாரம் அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக அமுதநிலை யதுபரவ ...... அதிமோகம் உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு முறுகபட மதனில்மதி ...... யழியாதே உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு னுபயநறு மலரடியை ...... அருள்வாயே வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு மருதினொடு பொருதருளு ...... மபிராமன் வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன் மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர் தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ சகலகலை முழுதும்வல ...... பெருமாளே. |
கூந்தலின் வரிசை கலைந்து போக, கண்கள் குவிய, வளைகள் கலகலவென்று ஒலிக்க, அமுதம் போன்ற மொழிகள் பதறுதலுடன் பெருக, அணிந்துள்ள முத்து மாலையானது அழகு ஒழுகுவதும், பூரிப்பதுமான மார்பின் மீது அசைய, இடுப்பு நெகிழ, மிகவும் காம இன்ப ரச நிலை பெருக, அதிக மோகத்துடன் மனம் உருகும்படிச் செய்கின்ற புணர்ச்சியைத் தருகின்ற விலைமாதர்களின் கொடியது என்று சொல்லத்தக்க சூழ்ச்சியில் என் புத்தி அழிந்து போகாமல், மயிலின் மீது ஏறி உலகம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த உனது இரண்டு நறு மணம் வீசும் மலர்ப் பாதங்களை அருள்வாயாக. வளைந்ததாக உள்ள அலை கடல் வற்றிப் போகும்படி செலுத்திய அம்பைக் கொண்டவனும்*, அடியார்களுக்கு வரங்களைத் தருபவனுமான திருமால், இரண்டு மருத மரங்களைத் தகர்த்து (கண்ணனாக) அருள் பாலித்த அழகன், கோடுகளை உடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதன், விஜயலக்ஷ்மியின் கணவனாகிய திருமாலின் மருகனே, போர்க்களத்தில் விரைந்து வந்து சண்டை செய்த அசுரத் தலைவனின் சேனைகள் சிதற, (கிரெளஞ்ச) மலை தூள்பட, அசுரர்பதியாகிய சூரனுடைய தலை சிதறி விழ, நெருப்பு பெருகி எழ, விரைவில் செலுத்திய கூரிய வேலனே, முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்து அழகிய மகளான வள்ளியின் கணவனே, எல்லாக் கலைகளிலும் முற்றும் வல்ல பெருமாளே.
* கடற்கரையில் வருண மந்திரம் ஜெபித்தும் சமுத்திரராஜன் வந்து வழி விடாததால் ராமர் கோபித்துக் கடல் மீது பாணம் விட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1091 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதன, மீது, செலுத்திய, வந்து, மாலையும், கடல், இரண்டு, முத்து, பெருமாளே, பெருக