பாடல் 1090 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்
ராகம் -
..... ; தாளம் -
|
தனதனன தாத்த தனதனன தாத்த தனதனன தாத்த ...... தனதான |
|
உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில் உயர்கனலை மூட்டி ...... விடஆவி மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி வலிவினொடு தாக்கி ...... வளையாமுன் மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள் மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய் பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு வரையில்மற வோர்க்கு ...... மகவாகப் பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த பிடியினடி போற்று ...... மணவாளா அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய் அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. |
உறவு முறை கொண்டுள்ள சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை உண்டாகும்படி விளைவித்து, அவர் தம் உள்ளத்தில் உள்ள கவலையால் உருகுதலை விட்டு, இந்த உடலை எடுத்ததின் வினைப்பயனாக, உடலை அழிவு செய்கின்ற பெரிய ஒரு சுடுகாட்டில் மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, உயிரை யமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், எனது மனமும் உன்னை நினைத்து காதல் மிக உண்டாக, உனது திருவடிகளை மகிழ்ச்சியுடன் சிரத்தையோடு போற்றுதற்கு புத்தியைத் தந்து அருளுக. பிறை போன்ற நெற்றியை உடைய, சேல் மீன் போன்ற கண்களை உடைய பெண்ணாகிய வள்ளியை, விருப்பத்துடன் வளர்ந்த வள்ளி மலையில் வேடர்களுக்குக் குழந்தையாக வந்து, மானிடம் இல்லாத மான் வயிற்றில் தோன்றி வளர்ந்து, நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண் யானை ஆகிய வள்ளியின் பாதங்களைப் போற்றும் கணவனே, அறுகம் புல், நிலவு, ஆத்தி, அலை வீசும் நீர் கொண்ட கங்கை (இவைகளைச்) சூடிய, நெருங்கிய சடையை உடைய சிவபெருமானுக்கு உபதேசப் பொருளை ஓதியவனே, நெருங்கி வரும் போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்தொழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1090 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, உடைய, தாத்த, உடலை, பெருமாளே, காத்த, வாய்த்து, மார்த்த, மீட்ட