பாடல் 1087 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனனந் தானம் தனதனனந் தானம் தனதனனந் தானம் ...... தனதான |
கலகமதன் காதுங் கனமலரம் பாலுங் களிமதுவண் டூதும் ...... பயிலாலும் கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும் கலைமதியங் காயும் ...... வெயிலாலும் இலகியசங் காளும் இனியவளன் பீனும் எனதருமின் தானின் ...... றிளையாதே இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங் கிருதனமுந் தோள்கொண் ...... டணைவாயே உலகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின் றுனதபயங் காவென் ...... றுனைநாட உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும் உருவியுடன் போதும் ...... ஒளிவேலா அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும் அடைவுடனின் றாடும் ...... பெரியோர்முன் அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென் றழகுடனன் றோதும் ...... பெருமாளே. |
கலகமிட வந்த மன்மதன் கொல்லுதல் போலச் செலுத்தும் பாரமான மலர்ப் பாணங்களாலும், களிப்பு மயக்கத்தைத் தரும் தேனை உண்ட வண்டுகள் செய்யும் ¡£ங்கார ஒலியினாலும், கடல் அலைகள் அங்கு ஒலிக்கும் பெருத்த ஓசை காதிலே விழுவதாலும், கலைகளை உடைய சந்திரன் தீப்போல் காய்கின்ற வெயிலாலும், விளக்கமுற்ற சங்கு வளையல்களை அணிந்தவளும், இனிய குணத்தை உடையவளும், அன்பையே தருகின்றவளும், மின்னல் போல ஒளி கொண்டவளுமான என்னுடைய அருமை மகள் தான் இன்று உன்னை நினைத்து இளைத்துப் போகாமல், அவளது மனதில் உள்ள துன்பம் நீங்க, அவள் முன் தோன்றி, ஒரே வர்க்கமான மணிகளால் ஆன செவ்விய மாலை தங்கும் இரு மார்பகங்களையும் உனது பன்னிரு தோளால் அணைந்தருளுக. உலகை வலம் வந்து ஓடுகின்ற சூரியன் ஆகாயத்திலிருந்து, உனக்கு அடைக்கலம், என்னைக் காத்தருள்க என்று முறையிட்டு உன்னை வேண்டிய காரணத்தால் ஆற்றல் உடைய, கொடிய சூரனுடைய தலையுடன் வலிய தோளையும் ஊடுருவிச் சென்று, உடனே வெளி வந்த ஒளி வீசும் வேலைச் செலுத்தியவனே, பேய்களுடன் பூதங்கள் சேர்ந்து பல விதமான பாடல்களைப் பாடுகின்ற அடைவுக்கு ஏற்ப, தாம் நின்று நடனம் புரிகின்ற பெரியோராகிய சிவபெருமான் முன்னொரு நாள் அறத்தையும், அற நெறி அமைந்த ஞானப் பொருளையும் நன்றாக உபதேசிப்பாயாக எனக் கேட்க, அழகாக உடனே அன்று அவருக்கு உபதேசித்த பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், வண்டுகளின் ¡£ங்காரம், கடலின் ஓசை, நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1087 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனனந், தானம், உடைய, உடனே, மலர்ப், உன்னை, வந்த, வெயிலாலும், தானின், பெருமாளே, மன்மதன்