பாடல் 1084 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த ...... தனதான |
கருதியே மெத்த விடமெலாம் வைத்த கலகவா ளொத்த ...... விழிமானார் கடினபோ கத்த புளகவா ருற்ற களபமார் செப்பு ...... முலைமீதே உருகியான் மெத்த அவசமே வுற்ற வுரைகளே செப்பி ...... யழியாதுன் உபயபா தத்தி னருளையே செப்பு முதயஞா னத்தை ...... அருள்வாயே பருவரா லுற்று மடுவின்மீ துற்ற பகடுவாய் விட்ட ...... மொழியாலே பரிவினோ டுற்ற திகிரியே விட்ட பழயமா யற்கு ...... மருகோனே முருகுலா வுற்ற குழலிவே டிச்சி முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே முருகனே பத்த ரருகனே வெற்பு முரியவேல் தொட்ட ...... பெருமாளே. |
மிகுந்த முன்யோசனையுடன் எல்லா விஷத்தையும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின் வன்மை கொண்டதும், போக இன்பம் தருவதும், புளகாங்கிதம் கொண்டதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான மார்பகத்தின் மீது மனம் உருகி நான் மிகவும் வசம் இழந்த நிலையில் இருந்த பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல், உனது இரண்டு திருவடிகளின் கிருபா கடாட்சத்தின் பெருமையைப் பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை எனக்கு அருள் புரிவாயாக. மிக்க துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு, அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்கு மருகனே, இயற்கை மணம் வீசும் கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் மார்பை விரும்பி அணைந்த கருணை வேளே, முருகனே, பக்தர்களுக்கு அருகே நின்று உதவுபவனே, கிரவுஞ்ச மலை ஒடிந்து அழிய வேலைச் செலுத்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1084 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, தத்த, வுற்ற, உடைய, கொண்டதும், இருந்த, போன்றதுமான, விட்ட, மெத்த, செப்பு, முருகனே, பெருமாளே