பாடல் 1075 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
தர்பாரிகானடா
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான |
திரிபுர மதனை யொருநொடி யதனி லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே சினமுடை யசுரர் மனமது வெருவ மயிலது முடுகி ...... விடுவோனே பருவரை யதனை யுருவிட எறியு மறுமுக முடைய ...... வடிவேலா பசலையொ டணையு மிளமுலை மகளை மதன்விடு பகழி ...... தொடலாமோ கரிதிரு முகமு மிடமுடை வயிறு முடையவர் பிறகு ...... வருவோனே கனதன முடைய குறவர்த மகளை கருணையொ டணையு ...... மணிமார்பா அரவணை துயிலு மரிதிரு மருக அவனியு முழுது ...... முடையோனே அடியவர் வினையு மமரர்கள் துயரு மறஅரு ளுதவு ...... பெருமாளே. |
அசுரர்களின் திரிபுரத்தை ஒரே நொடியளவில் பஸ்மம் ஆக்கி அருளிய சிவன் பெற்ற செல்வமே, கோபம் கொண்ட அசுரர்களின் மனத்தில் அச்சம் தோன்ற உன் மயிலினை வேகமாகச் செலுத்துவோனே, பெரிய கிரெளஞ்சமலையினை ஊடுருவும்படி எறிந்த கூரிய வேலை உடைய ஆறுமுகனே, விரகத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இள மார்புள்ள என் மகளை மன்மதன் விடும் மலரம்புகள் தொளைத்திடலாமோ? யானையின் அழகிய முகமும் பெருத்த வயிறும் உடையவராம் வினாயகருக்குப் பின்பு பிறந்தவனே, சிறப்பும் செல்வமும் உடைய குறவர்களது மகள் வள்ளியை கருணையோடு தழுவும் அழகிய மார்பை உடையவனே, பாம்புப் படுக்கையில் உறங்கும் ஹரியின் அழகிய மருமகனே, இந்த உலகம் அத்தனையும் சொந்தமாகக் கொண்டவனே, அடியவர்கள் வினையும் அசுரர்கள் தரும் துன்பமும் அற்றுப்போகும்படியாக திருவருளைத் தந்திடும் பெருமாளே.
இப்பாட்டு முருகனின் காதலால் விரகமுற்ற மகளுக்காக தாயார் பாடும் பாட்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1075 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தனதன, மகளை, முடைய, உடைய, அசுரர்களின், பெருமாளே, டணையு