பாடல் 1059 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பாகேஸ்ரீ
தாளம் - மிஸ்ரஅட - 18 - /7/7 00
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
- முதல் லகு
தாளம் - மிஸ்ரஅட - 18 - /7/7 00
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
- முதல் லகு
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான |
கவடு கோத்தெழு முவரி மாத்திறல் காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன் தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத் தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே சுவடு பார்த்தட வருக ராத்தலை தூளா மாறே தானா நாரா ...... யணனேநற் றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக் குவடு கூப்பிட வுவண மேற்கன கோடூ தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. |
மரக்கிளைகளை மிகுதியாய்க் கொண்டு எழுந்து நின்றதும், கடலின் நடுவிலே தோன்றியதுமான மாமரத்தின் (உருவில் இருந்த சூரனின்) வலிமையை காய்த்து அழித்த உன் வேலாயுதத்தை நான் பாடவில்லை, அவ்வெற்றியைப் பாராட்டி நான் ஆடுவதும் இல்லை. மோக்ஷ இன்பத்தை அடைய விரும்பி, கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதுமான உன் திருவடிகளின் மீது நான் விழுந்து வணங்குவதில்லை, அப்படி விழுந்து பணிவோரின் கால்களிலும் வீழ்ந்து வணங்குவதும் இல்லை. தவிட்டளவு சோறுகூட தயக்கமின்றி ஏற்பவர்களுக்கு நான் கொடுப்பதும் இல்லை. இவ்வாறு வாழ்வதை விட சாவதே எனக்கு மேலானது. பிறப்பு, இறப்புத் தொடரிலிருந்து எனது இந்த உடலுக்கு இனியேனும் விடுதலை கிடைத்து எப்போதும் நிலைபெறுமாறு, நாதனே, நீதான் அருள் புரிவாயாக. யானையின் அடிச்சுவட்டைப் பார்த்து, அதைப் பற்றி இழுத்துக் கொல்வதற்காக குளத்திற்கு வந்த முதலையின் தலை பொடியாகுமாறு 'ஹா, நாராயண மூர்த்தியே, நல்ல துணைவனே, பாற்கடலில் உதித்த மங்கை லக்ஷ்மியின் கணவனே, திருத் துழாய் மாலையை அணிந்த மார்பனே, கோபாலனே, என்னைக் காவாய்' என்று தன் துதிக்கையைத் தூக்கி, மலை போன்ற யானையான கஜேந்திரன் முறையிட, கருடன் மேல் ஏறி, பொன் சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதி, ஆகாயமார்க்கமாகப் பறந்து வந்து, யானையைக் காத்தருளிய திருமாலின் மருகனே, வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திய அரசன் இந்திரனின் தேவ உலகத்தை காத்தருளிய தலைவனே, தேவனே, செவ்வேளே, தேவர்தம் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1059 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, நான், இல்லை, விழுந்து, பெருமாளே, காத்தருளிய, மாறே, தாத்தன, கருணை, தாவா, தகிடதகதிமி