பாடல் 1058 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஹம்ஸத்வனி
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிடதகதிமி-3 1/2
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தன தனன தாத்தன ...... தந்ததான |
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல் இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப் பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில் கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு கமுத மாய்ப்புல ...... னைந்துமாயக் கரண மாய்த்தெனை மரண மாற்றிய கருணை வார்த்தையி ...... ருந்தவாறென் உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ உலகு போற்றிட ...... வெங்கலாப ஒருப ராக்ரம துரக மோட்டிய வுரவ கோக்கிரி ...... நண்பவானோர் முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை முலைகள் தேக்கிட ...... வுண்டவாழ்வே முளரி பாற்கடல் சயில மேற்பயில் முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே. |
எவ்வுயிர்க்கும் பொதுவானதாகி, தனிப்பட்ட மூல முதற் பொருளாகி, பகல், இரவு இவைகளைக் கடந்து சொல்லப்படுகின்ற வேதப் பொருளாகி, அப்பொருளின் முடிவானதாகி, பெரிய வெட்ட வெளியாய் ஆகி, மறைவு யாதொன்றுமன்றி, முடிவு இல்லாததான, யாவற்றுக்கும் அடைக்கலமாகி, எண்ணுவதற்கும் முடியாததாகி, உண்ணும் அமுதம்போல் இனிமையானதாகி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும் ஒடுங்கி அழிய, மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின் சேட்டைகளை அழித்து, எனது மரண பயத்தை நீக்கிய, உனது அருள் மொழி உபதேசம் எத்தனை உயர்ந்த நிலையான அற்புதம்? கடல் ஓலமிடவும், அசுரர்கள் போரொலி செய்யவும், உலகத்தோர் போற்றிப் புகழவும், வசீகரம் வாய்ந்த தோகை மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, பூமியிலுள்ள மலைகளிடத்தே விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனே, பார்வதியின் மகனே, கார்த்திகைப் பெண்களின் மார்பகங்களில் பால் நிரம்பி வர அதைப் பருகிய செல்வமே, தாமரை மீதும், திருப்பாற் கடலிலும், கயிலை மலையின் மீதும் முறையே வீற்றிருக்கும் மூத்தவர்களாகிய அயன், அரி, அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1058 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, மீதும், தலைவனே, பொருளாகி, இரவு, எனப்படும்