பாடல் 1060 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஸஹானா
தாளம் - மிஸ்ரஅட - 18 - 17 17 00
- முதல் லகு
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தாளம் - மிஸ்ரஅட - 18 - 17 17 00
- முதல் லகு
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான |
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர் பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம் பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச் சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல் சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ திருத ராட்டிர னுதவு நூற்றுவர் சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத் திலக பார்த்தனு முலகு காத்தருள் சீரா மாறே தேரூர் கோமான் ...... மருகோனே குருதி வேற்கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதா ளாமா ...... மயில்வீரா குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. |
சூரியனாகி, குளிர்ந்த சந்திரனாகி, பரந்த பூமியாகி, ஆகாயமாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி, விந்தையான நக்ஷத்திரங்களாகி, மற்றும் பலவுமாகி, ஞாயிறு முதலிய பல கிழமைகளுமாகி, 14+6+7 ஆகிய 27 சிறந்த நக்ஷத்திரங்களாகி, ஏழு உலகங்களாகி, வேதமாகி, வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாகி, பிரமனாகி, திருமாலாகி, இவர்களுக்கு மேற்பட்ட மங்கலப் பொருளானதும், அழிவு என்பதே இல்லாததான பரம்பொருளின், அஞ்ஞான இருள் என்பதே புகமுடியாத அந்தத் திருவடியை முடிமேற் சூடாமலும், நாடாமலும் வாழ்வு ஈடேறாமல் வீணாகத் திரிவேனோ? திருதராஷ்டிரன் பெற்ற துரியோதனாதி நூறு பேரும் வீரசுவர்க்க நாட்டை ஆளும்படியாக பதினெட்டே நாட்களில் போர்க்களத்தில் மாண்டு விழவும், சிறந்த அர்ச்சுனனும் உலகை ஆண்டு காத்தருளுகின்ற சீருடன் வாழுமாறு அவனது தேரில் சாரதியாக இருந்து செலுத்தின பெருமான் திருமாலின் மருகனே, அசுரர்களின் ரத்தத்தில் தோய்ந்த வேலைக் கரத்திலே ஏந்தியவனே, அரக்கர்களாம் ராட்சதர்களின் மீது கோபம் கொண்டவனே, கடப்ப மாலையையும், கூதளப்பூ மாலையையும் அணிந்தவனே, அழகிய மயில் வீரனே, வஜ்ராயுதத்தை ஏந்திய அரசன் இந்திரனின் தேவலோகத்தைக் காத்தருளின தலைவனே, தேவனே, முருகவேளே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1060 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, மேற்பட்ட, என்பதே, சிறந்த, மாலையையும், பெருமாளே, தாத்தன, காத்தருள், தகிடதகதிமி, நக்ஷத்திரங்களாகி