பாடல் 1057 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன தனன தாத்தன ...... தந்ததான |
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு குறைவி லாப்பல ...... என்பினாலுங் கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய குடிலி லேற்றுயி ...... ரென்றுகூறும் வடிவி லாப்புல மதனை நாட்டிடு மறலி யாட்பொர ...... வந்திடாமுன் மதியு மூத்துன தடிக ளேத்திட மறுவி லாப்பொருள் ...... தந்திடாதோ கடிய காட்டக முறையும் வேட்டுவர் கருதொ ணாக்கணி ...... வெங்கையாகிக் கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர் களவி னாற்புணர் ...... கந்தவேளே முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ முடிய வேற்கொடு ...... வென்றவீரா முடிய லாத்திரு வடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே. |
குடலையும், நீரையும், கொழுப்பையும், மலத்தையும் வைத்து, ஒரு குறைவும் இல்லாதனவுமான பல எலும்புகளாலும் பொல்லாத நோய்களுக்கு இருப்பிடம் என்னும்படி ஏற்படுத்தப்பட்ட குடிசையாகிய உடலில் ஏற்றப்பட்ட உயிர் என்று சொல்லப்படும் உருவம் இல்லாததான ஒரு நுண்மையான பொருளை நாடி வருகின்ற யமதூதர்கள் போரிட வருவதற்கு முன்பு, (என்) அறிவும் முதிர்ச்சி அடைந்து உனது திருவடிகளை நான் போற்றிப் பணிய, குற்றமில்லாத உண்மைப் பொருளை எனக்கு உதவி செய்யலாகாதோ? கொடிய காட்டிடையே வாசம் செய்யும் வேடர்களுக்கு (இந்த விதமாக வந்தது என்று) எண்ண முடியாதபடி, கணி என்று சொல்லப்படும் வேங்கை மரமாகி, மூங்கில் போன்ற தோள்களை உடைய குறக்குல மயிலாகிய வள்ளியை விரும்பி, சிறந்த களவியல் வழியாக அணைந்த கந்த வேளே, விரைவில் எதிர் வந்து மேல் விழுந்து சண்டை செய்யும் அசுரர்களின் பேரொலி எழ, அவர்கள் யாவரையும் வேல் கொண்டு வெற்றி கொண்ட வீரனே, முடிவே இல்லாத உன் விசுவ ரூபத்தை தரிசித்த பழங் கடவுளர்களாகிய அயன், அரி, பிரமன் என்னும் மூவர்க்கும் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1057 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, பொருளை, செய்யும், சொல்லப்படும், தம்பிரானே, கொடிய, முடிய