பாடல் 1050 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத் துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக துரிய மாகி வேறாகி ...... யறிவாகி நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம் நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன் அரியும் வாழ வானாளு ...... மதிரேகா கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர் கருதி டார்கள் தீமூள ...... முதல்நாடுங் கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
தொடுதற்கு முடியாததாய், நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாததாய், வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு வழி இல்லாததாய், நமது விருப்பத்துக்கு உரிய கடவுளாய், ஒப்பற்று ஒரே பரம் பொருளாக நிற்பதாய், விழிப்பு - உறக்கம் - கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பதுவாய், பிறிதாய், அறிவாய், நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாகக் கூறும் நிலைமையானது நூல்களால் கூறப்பட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (யாது என்பதையும்), ஒப்பில்லாத யமனார் ஏவ, ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள் மறக்காமல் (உயிரைப் பிரிக்க) வருகின்ற ஒரு நியதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ? வலிமை கெடாத கோடிக் கணக்கான சூரர்கள் இறக்க, வெற்றி வலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த வீரனே, பன்னிரண்டு புயங்களை உடைய தலைவனே, அழகு நிரம்பிய மான் பெற்ற பெண்ணாகிய வள்ளியின் கணவனே, பிரமனும் திருமாலும் (சூரனுக்கு அஞ்சாமல்) வாழும்படியாக வானுலகை ஆளும் மேம்பாடு உடையவனே, விஷம் நீங்காத கழுத்தை உடைய உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக முன்பு அவர்களைத் தேடிச் சென்று சண்டையிட்ட கடவுளும், ரிஷப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் மகனே, மூல காரணனே, வேதப் பொருளானவனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1050 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, ஆகிய, என்பதையும், வருகின்ற, உடைய, யாது, என்றும், வேதப், நேராக, பெருமாளே