பாடல் 105 - பழநி - திருப்புகழ்

ராகம் - .....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
அணிபட் டணுகித் திணிபட் டமனத் தவர்விட் டவிழிக் ...... கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத் தவன்விட் டமலர்க் ...... கணையாலும் பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற் பெறுமக் குணமுற் ...... றுயிர்மாளும் பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப் பெறுதற் கருளைத் ...... தரவேணும் கணிநற் சொருபத் தையெடுத் துமலைக் கனியைக் கணியுற் ...... றிடுவோனே கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக் கருதிச் சிறைவைத் ...... திடுவோனே பணியப் பணியப் பரமர்ப் பரவப் பரிவுற் றொருசொற் ...... பகர்வோனே பவளத் தவளக் கனகப் புரிசைப் பழநிக் குமரப் ...... பெருமாளே. |
வரிசையாக நின்று, அருகில் வந்து, கல்நெஞ்சுடைய பொதுமாதர் என்னை மயக்கச் செலுத்தும் விழிகளாகிய அம்புகளினாலும், வண்டுகள் சுற்றி மொய்க்கும் கரும்பு வில்லை உடைய செல்வந்தனாகிய மன்மதன் விடுத்த மலர் அம்புகளினாலும், மன நோய் அடைந்து, அறிவு நீங்கி, கேடுற்று, யமனையே அடையச் செய்திடும் தீய குணங்கள் நிறைந்து, இந்த உயிரானது மாண்டு போகும் பிறவியாகிய சமுத்திரத்தை விடுத்து நீங்கி, உயர்ந்த நன்முக்தியை நான் பெறுவதற்கு, நீ திருவருள் தந்தருள வேண்டும். வேங்கை மரத்தின் நல்ல உருவை எடுத்து மலைக்கன்னியாகிய வள்ளியை அடையக் கருதி அவளிடம் சென்றவனே, தாமரையில் அமரும் பிரமனை, பிரணவத்தின் உரையைச் சொல்லமாட்டாத காரணத்திற்காக சிறைச்சாலையில் அடைத்தவனே, பாம்பையும் கங்கை நதியையும் சடையில் அணியும் அந்த சிவபிரான் துதிசெய்ய, அவரிடம் அன்பு கொண்டு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்தவனே, பவள நிறம், வெண்ணிறம், பொன்னிறம் உள்ள மதில்கள் சூழ்ந்த பழநியில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 105 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், நீங்கி, பிரணவத்தின், அம்புகளினாலும், குமரப், கணையாலும், பணியப், பெருமாளே