பாடல் 103 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தந்த தானன தானன தந்த தானன தானன தந்த தானன தானன ...... தனதான |
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன் வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை வென்ற சாயக மோகரு ...... விளையோகண் தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத சங்க மாதர்ப யோதர ...... மதில்மூழ்கு சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர் பண்டு போலம ராவதி ...... குடியேறப் பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே. |
விரும்பத் தக்க தாமரை மலரோ, கொடிய விஷமோ, கயல் மீனோ, பெரிய இன்பக் கடலோ, மாவடுவின் பிளவோ, முன்பு வெந்து போன பழைய மன்மதன் சிவபெருமான் மீது செலுத்தி வென்ற அம்போ, கரு விளை மலரோ அந்தக் கண்கள்? யாவரும் அடைக்கலம் புகும் இடமோ, யம தூதர்களுடைய மனமோ என்று சொல்லக் கூடிய, மோக வெறி பிடித்த சேர்க்கையையே நாடும் விலைமாதர்களுடைய மார்பகங்களில் மூழ்குகின்ற எண்ணம் அழிய, உனது இரண்டு, கூதள மலர்களின் நறு மணமுள்ள மாலை தோய்ந்துள்ள, தண்டைகள் விளங்கும் திருவடிகளை நீ அளிப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? ஐந்து பெரிய பாதகங்களையும்* செய்யும் தாருகன் என்னும் யமனை ஒத்த அசுரன் பொடியாகும்படியும், தேவர்கள் முன்பு இருந்தபடியே பொன்னுலகத்தில் குடி ஏறவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனையும், திருமாலையும் பயப்படாதீர்கள் என்று கூறி, மாயையில் வல்ல (கிரவுஞ்ச) மலை கேடு அடைந்து பொடியாகவும் வேலைச் செலுத்திய இளையவனே. சிவந்த சடைக்காட்டின் மேலே, கங்கை, குருக்கத்தி, ஆத்தி, சந்திரன் இவைகளைச் சூடிய தலைவராகிய சிவ பெருமான் அளித்த பெரிய செல்வமே, செண்பக வனங்கள் நிறைந்துள்ளதும், உயர்ந்ததும், பெரிய மதில்கள் சூழ்ந்ததுமான திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
* சம்பரன் என்ற அசுரனை தன் மறு பிறவியில் கொன்றவன் மன்மதன்.
** திரிபுரங்களையும் எரித்தவரான புராரி சிவபெருமான்.
*** ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 103 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, பெரிய, தந்த, முன்பு, சிவபெருமான், வீற்றிருக்கும், மலரோ, மன்மதன், சூடிய, வென்ற, வெந்து, கூதள, பங்க, கங்கை, பெருமாளே