பாடல் 1027 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
தோதகமி குத்த பூதமருள் பக்க சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய் சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று சோகைபல குட்ட ...... மவைதீரா வாதமொடு பித்த மூலமுடன் மற்று மாயபிணி சற்று ...... மணுகாதே வாடுமெனை முத்தி நீடியப தத்தில் வாழமிக வைத்து ...... அருள்வாயே காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த கானககு றத்தி ...... மணவாளா காசினிய னைத்து மோடியள விட்ட கால்நெடிய பச்சை ...... மயில்வீரா வேதமொழி மெத்த வோதிவரு பத்தர் வேதனைத விர்க்கு ...... முருகோனே மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும் விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள், தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் கொஞ்சமேனும் என்னை அணுகாமல், வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக. காதல் மிகக் கொண்டு நல்ல தினை விளைவித்த காட்டுக் குறத்தியாகிய வள்ளியின் மணவாளனே, உலகம் முழுமையும் ஓடி (அதன் சுற்றளவை) அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் வீரனே, வேத மொழிகளை எப்போதும் ஓதும் அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகனே, முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1027 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நோய், நோய்கள், தானதன, தத்த, என்னை, சம்பந்தமான, பெருமாளே, பித்த, வைத்து, பச்சை, நீர்