பாடல் 1023 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தானத் ...... தனதான |
விட்ட புழுகுபனி நீர்கத் தூரி மொய்த்த பரிமளப டீரச் சேறு மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ...... களவேதான் மெத்த விரியுமலர் சேர்கற் பூர மெத்தை மிசைகலவி யாசைப் பாடு விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ...... குழையோடே முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன் விட்ட பகழிதனை யோடிச் சாடி மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் ...... கயல்மீனை முக்கி யமனையட மீறிச் சீறு மைக்கண் விழிவலையி லேபட் டோடி முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ...... கடவேனோ செட்டி யெனுமொர்திரு நாமக் கார வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார திக்கை யுலகைவல மாகப் போகிக் ...... கணமீளுஞ் சித்ர குலகலப வாசிக் கார தத்து மகரசல கோபக் கார செச்சை புனையுமண வாளக் கோலத் ...... திருமார்பா துட்ட நிருதர்பதி சூறைக் கார செப்பு மமரர்பதி காவற் கார துப்பு முகபடக போலத் தானக் ...... களிறூரும் சொர்க்க கனதளவி நோதக் கார முத்தி விதரணவு தாரக் கார சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே. |
விட்டுக் கலந்த புனுகு சட்டம், பன்னீர், கஸ்தூரி இவைகள் சேர்ந்த நறு மணம் உள்ள சந்தனச் சேறு நிரம்ப அப்பியுள்ள மார்பகத்தை விலை பேசி விற்று, கிடைத்த பொருளுக்குத் தக்கவாறு, நன்றாக விரிக்கப்பட்ட மலர் தூவினதும், கற்பூர மணம் கொண்டதுமான மெத்தைப் படுக்கையின் மீது புணர்ச்சி ஆசை விருப்பத்தை விற்கின்ற பொது மகளிர் (அணிந்துள்ள) சுருண்ட காதோலையையும் அழகிய குண்டலங்களையும் தாக்கி, விளங்கும் குமிழம் பூ போன்ற மூக்கைத் தாண்டி மன்மதன் எய்த மலர்ப் பாணங்களை ஓடும்படி மோதி, நெருங்கி மொய்க்கும் வண்டையும், வேலாயுதத்தையும், சேல் மீனையும், கயல் மீனையும் (தனக்கு இணையாகாமையால்) கீழ்ப்படச் செய்து, யமனும் வருந்தும்படி (கொல்லும் திறத்தில்) மேம்பட்டுச் சீறி விளங்குவதும், மை பூசிய கண் பார்வை என்னும் வலையில் சிக்கி அந்தப் புன்னெறியில் ஓடி முட்டிக் கொள்ளும் தீவினைகளுக்கு ஈடான நான் மயக்க அறிவு கொண்டவனாய் அழியக் கடவேனோ? செட்டி என்கிற அழகிய பெயரைக் கொண்டவனே, வெற்றி வேலைச் செலுத்தும் புகழைக் கொண்டவனே, (எட்டுத்) திசையளவும் உலகத்தை வலம் வந்து ஒரு கணப் பொழுதில் மீண்டு வந்த, அழகிய கற்றையாகிய தோகை நிறைந்த, குதிரையாகிய மயிலை உடையவனே, அலை புரளுவதும் மகர மீன்களைக் கொண்டதுமான கடலைக் கோபித்தவனே, வெட்சி மாலையை அணிந்துள்ள மணவாளக் கோலத்தனாகிய திரு மார்பனே, துஷ்டனாகிய அசுரர்கள் தலைவனான சூரனைச் சூறை ஆடியவனே, (உன்னைப்) புகழ்ந்து நின்ற தேவேந்திரனுக்கு காவற்காரனாய் உதவியவனே, பொலிவு உள்ள முகத்தில் மேலணியும், அலங்காரத் துணியைக் கொண்டதும், கன்ன மதத்தைக் கொண்டதுமான (ஐராவதம்) என்னும் யானையின் மீது உலா வரும் இந்திரனுடைய விண்ணுலகில் உள்ள பெருத்த சேனைகள் வியக்கும் தேவ சேனாதிபதியே, முக்திப் பேற்றை அளிக்கும் கொடைத் திறம் கொண்டவனே, பரிசுத்தமான வேடர்களின் மகளாகிய வள்ளியின் காவற் பணியை தக்க வேளையில் பூண்ட பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1023 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத், அழகிய, தத்த, உள்ள, கொண்டவனே, கொண்டதுமான, தனதனன, மீது, மீனையும், என்னும், அணிந்துள்ள, காவற், வேலைச், சேறு, விட்ட, கடவேனோ, செட்டி, பெருமாளே, வெற்றி, மணம்