பாடல் 1005 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
காம்போதி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும் நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும் நினது கருணையு முறைதரு பெருமையும் நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப முடியு மபிநவ வனசரர் கொடியிடை தளர வளர்வன ம்ருகமத பரிமள முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரடோளும் மொகுமொ கெனமது கரமுரல் குரவணி முருக னறுமுக னெனவரு வனபெயர் முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே கொடிய படுகொலை நிசிசர ருரமொடு குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக் குமுறு கடல்குடல் கிழிபட வடுமர மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர் குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா இடியு முனைமலி குலிசமு மிலகிடு கவள தவளவி கடதட கனகட இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக் கிறைவ குருபர சரவண வெகுமுக ககன புனிதையும் வனிதைய ரறுவரும் எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே. |
நீண்டதும், வடக்கே உள்ளதுமான மேரு மலை இடிபட்டுப் பொடிபடவும், (சூரனின் நாட்டைச் சுற்றியிருந்த) ஏழு மலைகளும் நெறு நெறு என்று நெரிவுறவும், முதுமை வாய்ந்ததும், பாம்புகளுக்குத் தலைவனும் ஆகிய ஆதிசேஷனது நெருங்கிய பணா முடிகள் கிழிபடவும், பூமி அதிரவும் விளையாடுகின்ற ஒப்பில்லாத மயிலும், சூரியனைத் தனது கூவலினால் (தினமும்) உமிழ்ந்தளிக்கும்* சேவல் அமைந்த கொடியும், உன்னுடைய கருணையும், உன்னிடம் நிலைத்து விளங்கும் பெருமையும், உன் செந்நிறமும், இளமையும், வளமையும், இரண்டு திருவடிகளும், கடம்பமாலை அணிந்த திருமுடிகளும், புதுமை நிறைந்த வேடர்களின் மகளாம் வள்ளியின் கொடி போன்ற இடையானது தளர்வுறும்படி வளர்கின்ற, கஸ்தூரி நறுமணம் கமழ்கின்ற, மொட்டுப் போல் குவிந்து பூரித்துள்ள மலை போன்ற மார்பகங்களைத் தழுவிய திரண்ட தோள்களும், மொகுமொகுவென்று வண்டுகள் ஒலிக்கின்ற குரா மலர் மாலையை அணியும் முருகன், ஆறுமுகன் என்று வரும் உன் திருநாமங்கள் யாவையும், இயல் தமிழில் அமைத்து, குற்றமறப் பாடி நான் ஓதும் ஒரு நாள் கிடைக்குமோ? கொடுமையான படுகொலைகளைச் செய்யும் அசுரர்களது மார்பில் குமுகும் என்னும் ஒலி எழும்படி வேகத்துடன் தாக்க, நிரம்ப இரத்தம் நதி வெள்ளம் போல் தாளத்தோடு குதித்துப் பாயவும், பிரமன் அஞ்சி ஓடவும், கலங்கி ஒலிக்கும் கடலின் நடுப்பாகங்கள் கிழிபடவும், பிஞ்சுகளுடன் கூடிய மாமரம் (சூரன்) மொளுமொளுவென்று அடிப்பாகத்திலிருந்து அலறி விழவும், உயர்ந்து வளர்ந்த பறவையின் பெயர் கொண்ட கிரெளஞ்ச மலை தொளைபட்டு அழியவும், ஒளிபடைத்த வேலைச் செலுத்தும் வேலனே. இடியும், கூர்மை மிக்க வஜ்ராயுதமும் (இவளுக்கு ஆயுதங்களாக) விளங்குபவை, கவளமாக ஊண் உண்பதும், வெண்ணிறமானதும், அழகுள்ளதும், பரந்ததும், மதச் சுவட்டினின்று மிகுந்த மதநீர் பொழியும் ஐராவதம் என்னும் வெள்ளை யானையும், பொன்னுலகமும் தனக்குச் சொந்தமாக உள்ள ஒப்பற்ற பெண்ணாம் தேவயானைக்குத் தலைவனே, குருபரனே, சரவணனே, பல முகங்களாய்ப் பரந்து வரும் ஆகாய கங்கையும், கார்த்திகைப் பெண்கள் அறுவரும், எங்கள் குழந்தை என்று உரிமை பாராட்டும்படி பார்வதி பெற்றெடுத்த தேவர்கள் பெருமாளே.
* சேவல் வாய்விட்டுக் கூவுவவதால் சூரியன் உதிப்பது புலவர் கற்பனையில் சேவல் சூரியனை உமிழ்வதாக உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1005 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தகதிமி, சேவல், போல், என்னும், வரும், நெறு, பெருமையும், தழுவிய, பெருமாளே, கிழிபடவும்