பாடல் 1004 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பாகேஸ்ரீ
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
தசையு முதிரமு நிணமொடு செருமிய கரும கிருமிக ளொழுகிய பழகிய சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ...... குடில்பேணுஞ் சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர் சவலை யறிவினர் நெறியினை விடஇனி ...... யடியேனுக் கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு வசன முறஇரு வினையற மலமற இரவு பகலற எனதற நினதற ...... அநுபூதி இனிமை தருமொரு தனிமையை மறைகளின் இறுதி யறுதியி டவரிய பெறுதியை இருமை யொருமையில் பெருமையை வெளிபட ...... மொழிவாயே அசல குலபதி தருமொரு திருமகள் அமலை விமலைக ளெழுவரும் வழிபட அருளி அருணையி லுறைதரு மிறையவ ...... ளபிராமி அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதலெழு தலமிவை முறைமுறை அடைய அருளிய பழையவ ளருளிய ...... சிறியோனே வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி மவுன மருளிய மகிமையு மிமையவர் மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ...... வடிவேலும் மயிலு மியலறி புலமையு முபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் வடிவு மிளமையும் வளமையு மழகிய ...... பெருமாளே. |
சதை, இரத்தம், மாமிசம் ஆகியவை நெருங்கியுள்ள, செயல்கள் நிறைந்துள்ள புழுக்கள் இருந்து பழகும் அறிவில்லாத ஜடப்பொருளாகிய உடல், இறுதியில், சுடு காட்டில் இடப்படுகின்ற சிறிய வீடு, (இதைப்) போற்றி வளர்க்கும் (சாத்திர முறைப்படி) அனைத்துக் கிரியைகளையும் செய்பவர்கள், போராடுகின்ற சமய வாதிகள், சரியை, கிரியை, தவம் என்று சொல்லும் சிலர், மனக் குழப்பம் உள்ள அறிவில்லாதவர்கள் ஆகியோர் கொண்டுள்ள மார்க்கத்தை* நான் விட்டொழிக்க, இனிமேல் அடியவனாகிய எனக்கு இதுதான் ஞானப் பொருள் என்று என் மனதில் படும்படி, ஒப்பற்ற உபதேசத்தை நான் பெறவும், நல்வினை, தீவினை எனப்படும் இருமைகள் நீங்கவும், எனது (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் நீங்கவும், (ஆன்மாவின்) கேவல சகல நிலைகள் நீங்கவும், என்னுடைய மமகாரம் ஒழியவும், உன்னுடைய துவித நிலை (அதாவது நீ வேறு, நான் வேறு என்ற தன்மை) நீங்கவும், அனுபவ உண்மையை, இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவு செய்து கூறுதற்கு அரிதான பேற்றினை, சக்தி, சிவம் என்னும் இரண்டு பேதங்களின் ஒன்றான தன்மையின் பெருமை விளங்க அடியேனுக்கு வெளிப்படுத்தும்படி உபதேசித்து அருள்வாயாக. மலைகளுள் சிறந்த இமய மலை அரசன் ஈன்ற ஒப்பற்ற அழகிய பார்வதி, களங்கம் அற்றவள், தூய்மையான சப்த மாதர்கள்** ஏழு பேரும் (தன்னை) வணங்க அருள் செய்து திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தேவி, அழகி, பாவம் அற்றவள், ஞான அனுபவம் உடையவள், காருண்யம் மிக்கவள், புதுமையானவள், அதலம் முதலான ஏழு உலகங்களுக்கும் முறைப்படி முற்றிலுமாக அருள் செய்த பழமை வாய்ந்தவள் ஆகிய உமாதேவி பெற்றருளிய குழந்தையே, அக்கினி சொரூபியாகிய சிவ பெருமான் மகிழும்படி ஒப்பற்ற உபதேச மொழியான மவுன உபதேசத்தை அவருக்கு அருளிய விசேஷப் பெருமையும், தேவர்கள் குலத்தில் வந்த மங்கை தேவயானையும், வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியும், கூர்மையான வேலும், மயிலும், இயற்றமிழில் வல்ல புலமையும், உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய தேவாரமும், கொடைத் திறம் நிறைந்த உனது கருணையும், உனது வடிவமும், இளமையும், செழுமையும் சிறந்து விளங்கும் அழகுமிக்க பெருமாளே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். ** சப்த மாதாக்கள்:அபிராமி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1004 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, நீங்கவும், ஒப்பற்ற, மார்க்கம், நான், சரியை, தகதிமி, அற்றவள், சப்த, உனது, தொழில், ஞானம், இடுதல், செய்து, அருள், உபதேசத்தை, கருணையும், மவுன, அருளிய, பெருமாளே, உடல், தருமொரு, கிரியை, முறைப்படி, வேறு