பாடல் 1002 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக் கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற அமுது துதிகையில் மனமது களிபெற கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான குடகு வயிறினி லடைவிடு மதகரி பிறகு வருமொரு முருகசண் முகவென குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற் கொடிய நெடியன அதிவினை துயர்கொடு வறுமை சிறுமையி னலைவுட னரிவையர் குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவிமதி பயமுற நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான நிசிசர் கொடுமுடி சடசட சடவென பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான நடன மிடுபரி துரகத மயிலது முடுகி கடுமையி லுலகதை வலம்வரு நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும் நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே. |
கடலை, பயறு இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை இனிய அமுது போன்ற சுவையுடன் பழுத்துள்ள முதிர்ந்த பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன், கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெறுவதற்காக, அமுதாக தனது துதிக்கையில் மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க, பெரிய குடம் போன்ற வயிற்றினில் அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற முருகனே, ஷண்முகனே என்று இரண்டு கைகளும் குவிய, மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக, உன்னைப் பணியாமல், கொடியதும் பெரிதானதுமான மிக்க வினையால் ஏற்படும் துயரத்துடன், வறுமையால் வரும் தாழ்வினால் மனம் அலைச்சல் அடைந்து, விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும், பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ? பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக் கவரும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், சூரியனும் சந்திரனும் பயப்படவும், பூமியும் நெறு நெறு என அதிரவும் போர்க்களத்துக்கு வந்த கொடியர்களான அசுரர்களின் கொடிய தலைகள் சட சட சட என்று அதிர்ந்து வீழவும், சொல்லப்படும் எட்டு மலைகளின் சிகரங்கள் கிடு கிடு என்று அதிர்ச்சி உறவும், உவமை இல்லாத வேலாயுதத்துடன், ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும் நடனம் செய்யும் வாகனமான குதிரை போன்ற மயில் மீது ஏறி வேகமாக உக்கிரத்துடன் புவியை வலம் வந்த தாமரை போன்ற திருவடிகளை உடையவனே, ஜீவநதியாகிய கங்கை குமு குமு என்று கொந்தளிக்க, முனிவர்களும் வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர என்று போற்ற, தேவர்கள் சிறை நீங்க, நறு மணம் வீசும் தாமரை மலர் மீது தங்கியிருந்து சரவணப் பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1002 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, வந்த, நெறு, பயப்படவும், கிடு, வீசும், குமு, தாமரை, மீது, பெரிய, பெருமாளே, அமுது, சுகியன், கடலை, கருணை, திருவருள், கொடிய, குவிய, வருமொரு, மனம்