சேவல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு
எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும் ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை ஈனப் பசாசு களையும் கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர் ககனமுற நிமிரும் வெங்கட் கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர் கரத் தடர்த்துக் கொத்துமாம் தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி சமணர் கிடு கிடென நடனம் தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய சரண அழகொடு புரியும் வேள் திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள் தெரியும் அரன் உதவு குமரன் திமிர தினகர முருக சரவண பவன் குகன் சேவற் திருத் துவஜமே (சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே) |
நெருப்பு போல் தோன்றி, படர்ந்துள்ள, தலை முடிகளை உடைய பேய்கள், பலவகைப்பட்ட பிரம்ம ராட்சதர்கள், குறும்புகள் செய்யும், பிறரால் ஏவப்பட்ட பிசாசுகள், தனித் தன்மைகள் வாய்ந்த பிசாசுகள், கொலைகளைப் புரியும் துஷ்ட பிசாசுகளையும், கரு நிறம் வாய்க்கப்பெற்று, கரடு முரடான, பெரிய மலை போலவும், மூங்கில்கள் போலவும், முயன்று, உயர்ந்து ஆகாச வரையிலும் நிமிர்ந்து நிற்கும், கொடிய பார்வையை உடைய பூதங்களையும், மட மட என்கிற சப்தத்துடன் பயந்து அலறும்படி, கையில் உள்ள நகங்களால் கொத்தித் தாக்கும். (அது எது என வினவினால்) பல மலைப் பிரதேசங்களில் வசித்து வந்த, மதம் பிடித்த காட்டு யானைகள் போலவும், தூண்கள் போலவும், வாழ்க்கை நடத்தி வந்த, அமணர் கூட்டம் கிடு கிடு என நடுங்கும்படி, காலில் அணிந்துள்ள தண்டைகளும் சிலம்புகளும், தனது சின்ன திருவடிகள் அழகு பெறும்படி நர்த்தனம் புரியும் ஞானசம்பந்தப் பெருமான், முப்புரங்களும் எரிந்து சாம்பலாகும்படி புன்முறுவல் பூத்த இறைவரும், வேதங்களால் அறிவிக்கப்படும் சிவபெருமான், உலகத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு அருளிய குமாரக் கடவுள், அஞ்ஞான இருளை நீக்கும் ஞான சூரியனான முருகன், நாணல் பொய்கையில் அவதாரம் செய்தவன், அடியார்களின் இதயக்குகையில் வீற்றிருப்பவன் ஆகிய குமாரக் கடவுளின், கொடியில் விளங்கும் சேவலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 2 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போலவும், பசாசு, துவஜமே, கிடு, புரியும், வந்த, குமாரக், பிசாசுகள், உடைய, சேவற், திருத், குகன், செய்யும்