சேவல் விருத்தம் - 1
கம்சத்வனி - கண்ட சாபு
உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல உரிய பர கதி தெரியவே உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள்மிடி கெட அருளியே கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக் கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற கைக்கொட்டி நின்றா டுமாம் மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர் மடிய அயில் கடவு முருகன் மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற வரிசையின மகள் அவளுடன் சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண சிறுவன் அயன் வெருவ விரகிற் சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன் சேவற் திருத் துவஜமே (சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே) |
இப்பூவுலகில், முருகப் பெருமானின் அடியவர்களுக்கு, நாள்தோரும் ஏற்படும், இடஞ்சல்கள் நீங்கும்படியும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய லட்சியமாகிய, சாயுச்சிய நிலையாகிய முக்தியை, காண்பித்தருளியும், படத்தில் ரத்தினத்தைத் தாங்கி இருக்கும் சர்ப்பங்கள் போல அலைந்து திரிகின்ற, நல்வினை தீவினை இரண்டும் அழியவும், அஞ்ஞான இருளாகிய பொருள் வறுமை அறிவு வறுமை ஆகிய இரண்டும் அழிந்து ஒழியும்படி, அருள் செய்யவும், இடஞ்சல்கள் செய்துவரும், பேய்களும் குட்டிச் சாத்தான்களும், கொடிய பாம்புகள், மிகுந்த பலத்துடன், பெரும் துன்பத்தை தர வந்தால், அவைகளை எல்லாம், கண்களைப் பிடுங்கியும் தேகங்களைப் பிளந்தும், தனது சிறகுகளைக் அடித்துக் கொண்டு வெற்றிக் களிப்புடன் நின்று கூத்தாடும் (அது எது என வினவினால்) உலகில் உள்ள மலைகள் அனைத்தும் பொடிபடவும், சமுத்திரம் வற்றி வறண்டு பொகவும், அரக்கர்கள் அனைவரும் இறந்து மடியவும், வேலாயுதத்தைப் பிரயோகித்த முருகப் பெருமான், சிகரங்களை உடைய மேருமலை தோல்வி அடையும்படி, எதிர்த்து போர் செய்கின்ற, தன பாரங்களை உடைய பெண்ணும், வேடர் குடி மக்களாகிய, புகழ் மிக்க, அந்த குலத்தில் பிறந்த வள்ளிப் பிராட்டியையும், கோபமுடைய வஜ்ராயுதத்தை ஏந்தியுள்ள இந்திரனின் திருமகளாகிய தேவயானையையும், அணைத்திருக்கும் பன்னிரு திருப்புயங்களை உடையவன், விளங்கும் சரவணப் பொய்கையில் உதித்த குமாரன், பிரம தேவன் அஞ்சும்படி, வெகு சாமர்த்தியமுடன், தலையில், மிகுந்த கோபத்துடன் குட்டி அருளிய, சண்முகப் பெருமானின் கொடியில் அமர்ந்துள்ள சேவலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 1 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துவஜமே, இடஞ்சல்கள், இரண்டும், வறுமை, உடைய, மிகுந்த, பெருமானின், சேவற்திருத், நெறு, மலைகள், வெகு, அறுமுகவன், உலகில், முருகப்