கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் போர்வேல புரத்தா பூப தியே. |
24 |
சூரபத்மன் குலம் முழுவதையும், அவனுக்கு காவலாய் இருந்த கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் சென்ற கொடிய கொலை புரியும் வேலாயுதத்தை திருக்கையில் தாங்கிக் கொண்டிருப்பவனே, இந்திரனுடைய நகரத்திற்கு அரசனே, கூரிய வேல் போன்ற கண்களை உடைய, மாதர்களுடைய தனபாரங்களை, சேர விருப்பங்கொண்ட அடியேன், உனது திரு அருள் பேற்றை பெற நான் நினைக்க மாட்டேனோ? ..
மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றிய சேவகனே. |
25 |
திருக்கரங்கள் மட்டுமோ, கையில் விளங்கும் வேலாயுதம் மட்டுமோ, திருவடிகள் மட்டுமோ, திருமேனி முழுவதும் செம்மை நிறம் கொண்டவனே, மயில் ஏறிய மாவீரனே, கொடிய தீவினையால் வந்த வாழ்க்கையை, என்றும் நிலையானது என மகிழ்ந்து, அந்தோ, அடியேன் உழலுதல் நீதியோ? ..
ஆதார மிலே னருளைப் பெறவே நீதா னொரு சற்று நினைந்திலையே வேதாகம ஞான விநோ தமனோ கீதா சுரலோக சிகா மணியே. |
26 |
வேதங்களிலும் ஆகமங்களிலும் காணப்படுகின்ற உட் பொருளான ஞானத்தையே வடிவாகக் உடையவனே, மனதிற்கு எட்டாத நிலையில் இருப்பவனே, தேவ லோகத்தின் முடி மணியாக விளங்குபவனே, உனது திருவடியை அன்றி வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லாத அடியேன், திருவருளைப் பெற்று உய்யுமாறு, நீ ஒரு சிறிதேனும் நினைக்க வில்லையே (நினைத்து அருள் புரியவும்). ..
மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலேறிய வானவனே. |
27 |
பொன்னைப் போன்றவனே, நவ ரத்தினம் போல் ஒளியை வீசுபவனே, பேரின்பப் பொருளே, பேரருளானவனே, தலைவனே, மயிலை வாகனமாகக் கொண்ட மேலானவனே, மின்னலைப் போல் தோன்றி உடனே மறையும் நிலையில்லாத இவ்வுலக வாழ்வை நிலையானது என எண்ணிக் கொண்டிருக்கும் நான், இந்த நிலையை என்ன என்று கூறுவேன், இந்த உலகில் என் தலை விதியின் பயன் இதுதானோ? ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மட்டுமோ, அடியேன், மணியே, விதியின், பொருளே, போல், நிலையானது, நினைக்க, உனது, அருள், நான், கொடிய