கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் சூடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே. |
44 |
பகைவர்களையும், மாயை மற்றும் மலங்களையும் அழிக்கின்ற, ஓப்பற்ற வேலாயுதக் கடவுளின் திருவடிகள், முத்தி தலத்திலும், தேவர்களின் சிறப்பான தலைகளிலும், வேதங்களிலும் வள்ளி வாழ்ந்த வெப்பமான காட்டிலும், தினைப் புனத்திலும் மணக்கும்படி விளங்கும், அத்தகைய திருவடிகளை என் தலை மேல் சூடும்படி தந்தருளிய கருணையை சொல்லி விளக்க முடியுமோ? (முடியாது). ..
கரவா கியகல்வி யுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக தயா பரனே. |
45 |
சற்குருநாதனே, குமரனே, வஜ்ர படையோனே, தெய்வயானைக்கு நாயகனே, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு சிவ யோகத்தை அருள் பாலிக்கும் கருணாமூர்த்தியே, தாம் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுத் தராமல் ஒளித்து வைத்துக்கொள்ளும் குருமார்களிடம் சென்று, அக் கல்வி ஞானத்தை நான் யாசிக்கா வண்ணம், உண்மைப் பொருளை உபதேசித்து அருள்வாயோ? ..
எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே. |
46 |
கந்தக் கடவுளே, ஒளி படைத்த வேலாயுதத்தை உடையவனே, உமையம்மையின் திருக்குமரனே, என்றும் இளையோனே, வேத நாயகனே, எங்களுக்கு பெற்ற தாயாகவும், எனக்கு அருள் புரியும் தந்தையும் நீதானே, அடியேனுடைய மனக் கவலைகளை எல்லாம், தீர்த்து என்னை ஆண்டு அருள்வீராக. ..
ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித் தவனே. |
47 |
கோபித்து வந்த, சூரபத்மனை அழித்து, துன்பத்தைக் கூறி முறையிட்ட தேவர்களின் உலகத்தை, திருப்பி கொடுத்து சந்தோசப் படுத்தியவனே, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து, அவற்றிக்கு அப்பால் உள்ள அநுபூதியாகிய குக சாயுச்சிய நிலையை, அடியேன் பெறும் பேறாக, பெற்றுக் கொள்ளுகின்ற வழியை எனக்கு அருள்வாயோ? ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அருள்வாயோ, எனக்கு, அருள், நாயகனே, குமரா, தேவர்களின்