கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. |
48 |
உலகாயத பந்த பாசத்தில் நெருக்கமான உறவுகள் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டு, அதனால் மல இருள் முற்றிலும் வலிமை குன்றி ஒழியும்படி, மயக்கத்தை வென்ற சிவ ஞானிகளுடன், பொருந்தி இருக்கும் வேலாயுதக் கடவுளே, ஜீவ போதம் தன்னை விட்டு நீங்கி, சிவ போத நிலையில் அடங்கி, அந்த அருட் காட்சியில் லயித்து பதிஞானத்தால் உணர்கின்ற சிவ ஞானிகளது உள்ளுணர்வில், பிரிதல் சிறிது கூட இல்லாமல், கலந்து நின்ற பெருமான் நீ அல்லையோ? ..
தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. |
49 |
ஒளி வீசுகின்ற கதிர் வேலாயுதத்தை உடையவனே, வெவ்வேறு வடிவங்களை எடுக்கும் திறமையைப் பெற்றவனே, உன்னைத் தியானிக்கும் அடியவரது துன்பத்தைப் போக்கும், கருணை நிரம்பிய பேரொளியே, கருவி கரணங்களிலிருந்து கழன்று, தனிமையான இனிமையில் நிலைத்து நின்ற பேரின்பத்தை, மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படி, இனி மற்றவர்க்கு விளக்கிச் சொல்ல இயலுமோ? (இயலாது). ..
மதிகெட்டறவா டிமயங் கியறக் கதிகெட்டவமே கெடவோ கடவேன் நதிபுத்திர ஞான சுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே. |
50 |
கங்கா நதியின் திருக் குமாரனே, மெய் அறிவிற்கும் அதனால் விளையும் பேரின்பத்திற்கும் தலைவனே, அந்தத் திதி புத்திரராகிய அசுரர்களின், வலிமையை அழித்த போர் வீரனே, அறிவு கெட்டு, மிகவும் வாட்டமுற்று, மயக்கமுற்று, அற நெறியால் வரும் உனது அநுபூதி நிலையை இழந்து, கெட்டு ஒழிந்து விட மாட்டேன் ..
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் க்கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. |
51 |
ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட சகள வடிவாயும், குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும், உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும், இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும், மலராகவும், அம் மலரின் மணமாகவும், மாணிக்கமாகவும், அதன் ஒளியாயும், சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்து காப்பவனும், சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும், அந்த உயிர்களின் வினைப் பயனாகவும், முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும் நிலையாகவும், உள்ள முருகக் கடவுளே என் குருவாக வந்து எனக்கு அருளி என்னை ஆட்கொண்டவன். ..
கந்தர் அனுபூதி முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அந்த, நின்ற, பொருளாகவும், கெட்டு, நிலையில், அதனால், கடவுளே, றறநின்